குப்பை கிடங்கில் பணியாற்றும் பெண் ஊழியர் குப்பைகளினிடையே சிக்கி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குப்பைகளை தரம் பிரிக்கும் ஊழியர்கள்
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொட்டப்படும் குப்பைகளை சேகரிக்கப்பட்டு அதனை வெள்ளலூர் குப்பை கிடங்கிற்கு கொண்டுவரப்படுகிறது. அதனை மாநகராட்சி ஊழியர்கள் சார்பாக குப்பைகள் தரம் பிரித்து எரிக்கப்படும். இந்தநிலையில் இன்று வழக்கம் போல் குப்பைகளை ஏற்றி வந்த டிப்பர் லாரி குப்பை கிடங்கில் குப்பையை கொட்டியுள்ளது. இதனை தரம் பரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது லாரியில் இருந்த குப்பைகளை கொட்டிய போது லாரியின் பின்புறம் சிவகாமி என்ற பெண் ஊழியர் நின்று கொண்டிருந்துள்ளார்.

குப்பைகளில் சிக்கி பெண் உயிரிழப்பு
அப்போது லாரியில் இருந்த குப்பைகள் சிவகாமி மீது கொட்டியதாக கூறப்படுகிறது. இதில் குப்பைகளுக்கிடையே மாட்டிய நிலையில் சிவகாமி சிக்கி தவித்துள்ளார். தன்னை காப்பாற்றும்படி சிவகாமி சத்தமிட்டுள்ளார். அதற்க்குள் குப்பைகள் முழுவதுமாக அவர் மேல் மூடியுள்ளது. அருகில் இருந்த சக ஊழியர்கள் குப்பைகளை அகற்றி அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் மூச்சு திணறி சிவகாமி உயிரிழந்துள்ளார். இதனையடுத்து ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து போத்தனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி ஓட்டுநர் பெண் ஊழியர் நின்று கொண்டிருந்தது தெரியாமல் குப்பைகளை கொட்டினார்களா? அல்லது தெரிந்தே கொட்டினார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
