இஸ்லாமியர்களின் நலனுக்காக எனக்கூறி அதிக அளவில் பணம் வசூல் செய்து அது தவறான காரியங்களுக்கு பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 

இஸ்லாமியர்களின் நலனுக்காக எனக்கூறி அதிக அளவில் பணம் வசூல் செய்து அது தவறான காரியங்களுக்கு பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உத்தரவிட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை எதிர் மனுதாரராக சேர்க்கப்படாதது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் அந்த மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த ஜகுஃபர் சாதிக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ரமலான் பண்டிகை உள்ளிட்ட பல்வேறு தருணங்களில் சிறையில் உள்ள இஸ்லாமிய கைதிகளுக்கு உதவுவதற்காகவும், இஸ்லாமியர்களின் நலனுக்காகவும், பல நலதிட்டங்களுக்காகவும் நிதி வசூலிப்பதாக கூறி அதிக அளவில் பணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பணம் வசூலிப்பவர்களால் அப்பணம் சட்டவிரோத காரணங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. அந்த சட்ட விரோத செயல்களில் அதிக அளவில் சிறுவர்கள் இளைஞர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும் அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களின் வாழ்க்கை அதனால் பாதிக்கப் படுகிறது. இதுதொடர்பாக ஆவடி காவல்துறையில் புகார் கொடுத்தும் அதன் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

எனவே உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த நபர் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு வைக்கும் நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை ஏன் எதிர் மனுதாரராக சேர்க்கவில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து சம்பந்தப்பட்ட நபர்களை எதிர் மனுதாரராக சேர்த்து புதிய மனு தாக்கல் செய்வதாக கூறி இந்த வழக்கை வாபஸ் பெற அனுமதிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

அதை ஏற்ற நீதிபதிகள் மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்து கோவில்களை புனரமைப்பதாக கூறி லட்சக்கணக்கில் பணத்தை வசூல் செய்து மோசடி செய்தார் என்ற புகாரில் யூடியூபர் பாஜகவை சேர்ந்த கார்த்திக் கோபிநாத் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மறுபுறம் இஸ்லாமியரின் நலனுக்காக எனக்கூறி அதிக அளவில் பணம் வசூல் செய்யப்படுவதாக நீதிமன்றத்திற்கு புகார் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.