யார் இந்த இளைஞன்? காதலியை சுட்டு வீழ்த்த காரணம் என்ன? விசாரணையில் திடுக் தகவல்கள்
விழுப்புரம் அன்னியூரைச் சேர்ந்த மருத்துவ மாணவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்துகொண்டார் ஒரு காவலர். இவர்கள் இருவரும் காதலர்கள் மற்றும் சந்தேகத்தால் சுட்டுவிட்டு தானும் வீழ்ந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அன்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சேகர் - மரியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு தமிழ் ரோஜா, சரஸ்வதி இரண்டு மகள்கள். மூத்த மகள் தமிழ் ரோஜா பொறியியல் படித்துள்ளார். இளைய மகள் சரஸ்வதி இவர் கடந்த 2015-ம் ஆண்டு சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நர்ஸிங் முதலாமாண்டு படித்திருக்கிறார்.
அப்போது, சென்னை கமாண்டோ போலீஸ் பயிற்சிப் பள்ளியில் பணிபுரிந்து வந்த வேலூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் ஃபேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டிருக்கிறது. நட்பு நாளடைவில் காதலாக மாறி, இருவரும் காதலித்து வந்திருக்கின்றனர். 2016-ம் ஆண்டு, அரசு நடத்திய எம்.பி.பி.எஸ் கலந்தாய்வில் சரஸ்வதிக்கு இடம் கிடைத்ததால், நர்ஸிங் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு, சென்னையில் கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகாலமாக, இவர்கள் காதலித்து வந்தனர். இருவீட்டாருக்கும் இவர்களது காதலுக்குச் சம்மதம் தெரிவித்தனர். அந்தியூரைச் சேர்ந்த கார்த்திகேயன், கமோன்டோ பயிற்சி பெற்று 15வது பட்டாலியனில் இருந்து வந்தார். தற்போது தமிழகப் பாதுகாப்புப் பிரிவில் ஓ.டி.யாக இருந்து வருகிறார். சென்னைக்கு மூன்று நாள் பயணமாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வருவதையொட்டி, அவர் தங்குவதற்கு வீடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வீட்டின் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்பட்டார் கார்த்திகேயன்.
அக்டோபர் 10ந் தேதி சரஸ்வதிக்குப் பிறந்தநாள் என்பதால், நேற்று இரவு அவர் சென்னையிலிருந்து பைக்கில் அன்னியூர் வந்தார். இரவு 12.00 மணியளவில், தான் வாங்கிவந்த கேக்கை வெட்டினார் கார்த்திகேயன். அப்போது, சமீபகாலமாகத் தன்னுடன் பேசாமல் இருபப்து குறித்து சரஸ்வதியிடம் கேள்விகள் கேட்டார் கார்த்திகேயன். அந்த நேரத்தில் சரஸ்வதியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.
இதனால் சந்தேகம் அடைந்த கார்த்திகேயன், சரஸ்வதியிடம் மோதலில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் உச்சகட்டமாக, தன் இடுப்பிலிருந்த துப்பாக்கியை எடுத்து லோடு செய்து சரஸ்வதியின் நெஞ்சில் இருமுறை சுட்டுக் கொலை செய்தார் கார்த்திகேயன். அதன்பின், தனது தலையில் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். சந்தேகப் பிரச்சினையால், சரஸ்வதி கொஞ்சம் காலமாகக் கார்த்திகேயனை விட்டு ஒதுங்கியிருந்ததாகச் சொல்கிறார்கள்.
இருவரும் பேசாமல் பிரிந்திருந்ததால், சரஸ்வதிக்கு வேறு யாருடனோ நட்பு இருப்பதாக நினைத்திருக்கிறார் கார்த்திகேயன். அவரைக் கொலை செய்யும் முடிவோடு, துப்பாக்கியுடன் வந்துள்ளார். சந்தேக வியாதியால், துப்பாக்கிக் குண்டுகளுக்கு இருவரும் பலி ஆகியுள்ளனர். இவர்கள் இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்துள்ளனர் காவல் துறையைச் சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத சில அதிகாரிகள்.