கொலை கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை முற்றிலும் ஒழிக்க தமிழக காவல்துறை  தீவிரம் காட்டி வருவதுடன், நேற்று முன்தினம் (இரவு) ஒரே நாளில் 560  ரவுடிகள்   கைது செய்யப்பட்டுள்ளனர். 

கொலை கொள்ளை உள்ளிட்ட குற்றங்களை முற்றிலும் ஒழிக்க தமிழக காவல்துறை தீவிரம் காட்டி வருவதுடன், நேற்று முன்தினம் (இரவு) ஒரே நாளில் 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் நேற்று இரவு மேலும் ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த காவல்துறைக்கும் சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலினின் மக்கள் நல திட்டங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அதேபோல் பல்வேறு அரசு துறைகளில் சீர்திருத்த நடவடிக்கைகளிலும் அரசு சீரிய கவனம் செலுத்தி வருகிறது, இந்நிலையில் அனைத்திற்கும் மாறாக தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக கொலை கொள்ளை போன்ற சம்பவங்கள் நடந்து வருவது, தமிழக காவல்துறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

அரசை விமர்சிக்கும் ஒரு ஆயுதமாக எதிர்கட்சிகள் இதை பயன்படுத்தி வருகின்றன. எனவே இதை கலையும் நோக்கில் களமிறங்கிய தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு ஸ்டாமிங் ஆபரேஷன் என்ற பெயரில் பழைய குற்ற பின்னணி உள்ள ரவுடிகளை கண்டரிந்து கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து நேற்று முன்தினம் இரவு தமிழகம் முழுவதும் போலீசார் கைது வேட்டை நடத்தியதில் 560 ரவுடிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவும் ரவுடிகள் கைது நடவடிக்கை தொடர்ந்தது. ஆனாலும் சென்னை எம்ஜிஆர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பிரபல ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒட்டுமொத்த காவல்துறையையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சென்னை எம்ஜிஆர் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குடிசைப்பகுதியில் வசித்து வருபவர் பிரபல ரவுடி காளி, இவர் நேற்று இரவு அவரது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார், அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று ரவுடி காளியை சரமாரியாக வெட்டியது, அவரின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் வெளியே வந்து பார்த்தனர், ஆனால் அதற்குள் காளியை வெட்டிய கும்பல் அங்கிருந்து மறைந்தது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காளியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். 

முதல்கட்ட விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த தீபக் என்பவருக்கும் காளிக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாகவும் அதன் அடிப்படை இந்த கொலை நடந்து இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. மேலும் இது முன்விரோதம் காரணமா.? அல்லது கள்ளகாதல் விவகாரமா.? இந்த கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மொத்தத்தில் கொலை குற்றத்தை தடுக்க தமிழக போலீஸ் தீவிரம் காட்டி வரும் நிலையில், ஒரு ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பது ஒட்டுமொத்த காவல்துறையையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.