மொட்டை கெட்அப்பில் எஸ்கேப் ஆக பிளான்... சிவசங்கர் பாபா சிக்கியது எப்படி...!
சிபிசிஐடி போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அப்போது சிவசங்கர் பாபாவிற்கு பெண் பக்தை ஒருவர் உதவி செய்தது தெரியவந்துள்ளது.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து அவர் மீது மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டம் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில், சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லுவதை தடுக்கும் விதமாக லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிவசங்கர் பாபா நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீசார் டேராடூன் விரைந்ததை அடுத்து அங்கிருந்து சிவசங்கர் பாபா தப்பியது தெரியவந்தது. இதையடுத்து சிவசங்கர் பாபா நேபாள நாட்டிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து சிபிசிஐடி போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அப்போது சிவசங்கர் பாபாவிற்கு பெண் பக்தை ஒருவர் உதவி செய்தது தெரியவந்துள்ளது. அவர் தான் சிவசங்கர் பாபாவை சென்னையில் இருந்து உத்ரகாண்டிற்கு அழைத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பெண் பக்தையின் செல்போன் மூலமாக சிவசங்கர் பாபா தனக்கு வேண்டியவர்களை தொடர்பு கொள்வதும் கண்டறியப்பட்டது. மேலும் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையில் இருந்து அந்த பெண் பக்தர் குறித்த தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தன.
ஆனால் துரதிஷ்டவசமாக அந்த பெண் பக்தரும் தன்னுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட, போலீசார் வேறு கோணத்தில் விசாரணை நடத்தினர். அப்போது சிவசங்கர் பாபா டெல்லி சென்றால் வழக்கமாக பக்தர் ஒருவருடைய இல்லத்தில் தான் தங்குவார் என்பது தெரியவந்தது. மேலும் உத்தரகாண்டில் இருந்து செல்லும் முன்பு சிவசங்கர் பாபா டெல்லி பக்தரிடம் போனில் பேசியதும் கண்டுபிடிக்கப்பட்டது. பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு தெற்கு டெல்லியின் சாக்கெட் என்ற பகுதியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் டெல்லி போலீஸ் உதவியுடன் மடக்கிப் பிடித்தனர். டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சிவசங்கர் பாபா மொட்டை தலையுடன் இருக்கும் போட்டோக்கள் வெளியாகியுள்ளன. அவர் மொட்டை கெட்டப்பில் வேறு நாட்டிற்கு தப்ப முயன்றிருக்கலாம் எனக்கூறப்படுகிறது.