புதுச்சேரியில் ரவுடி ஒருவர் குண்டு வீசி, ஓட ஓட தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதால் பதற்றம் நிலவுகிறது.

புதுச்சேரி வாணரப்பேட்டையைச் சேர்ந்தவர் ரவுடி சாணிக்குமார். கொலை, கொள்ளை என பல்வேறு குற்றச்செயல்களில் இவர் ஈடுபட்டு வந்திருக்கிறார். இதனால் இவர் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. கைதாகி சிறையிலும் இருந்திருக்கிறார். ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றிருந்த இவர் சில மாதங்களுக்கு முன்னர் தான் சிறையில் இருந்து வெளியே வந்திருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த நிலையில் சாணிக்குமார் வசிக்கும் பகுதியில் இருக்கும் காளியம்மன் கோவிலில் இரண்டு நாட்களாக திருவிழா நடைபெற்று வந்திருக்கிறது. அதில் அவர் தன் நண்பர்களுடன் கலந்து கொண்டு இருக்கிறார்.

அப்போது திருவிழாவில் புகுந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் சாணிக்குமாரை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதற்காக அவர் மீது வெடிகுண்டை வீசி இருக்கின்றனர். சுதாரித்து கொண்ட அவர் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்திச் சென்று சரமாரியாக வெட்டி இருக்கிறது. ரத்தவெள்ளத்தில் கிடந்த சாணிக்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதன்பிறகும் விடாமல் அந்த மர்ம கும்பல் அவரது தலையை துண்டித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இந்த கொலை குறித்து அங்கிருந்தவர்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாணிக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பழிக்கு பழியாக நடந்த சம்பவமா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரபல ரவுடி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.