பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிய ரௌடி !! பயந்த ஓடிய பொது மக்கள் !!
கரூர் அருகே பட்டாக்கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடி பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய 3 ரௌடிகளை கைது செய்த போலீசார் தலைமறைவான 4 பேரை தேடி வருகின்றனர்.
கரூரை அடுத்த தொழில்பேட்டை அருகில் உள்ள வெள்ளாளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் . அப்பகுதியில் ரௌடியாக செயல்பட்டு வந்த மணிகண்டன் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இவர் தனது பிறந்தநாளை கொண்டாட நேற்று இரவு 12 .05 மணிக்கு தொழில் பேட்டை பேருந்து நிறுத்தம் அருகில் கொண்டாடினார். இவரது நண்பர்கள் அசோக் ஆனந்த், கார்த்திக், அசோக், முழியன், பாலன், பழம் ராஜா மற்றும் சிலருடன் பட்டா கத்தியை பயன்படுத்தி கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
அத்துடன் அந்த வழியாக சென்ற பொது மக்களையும் பட்டாக் கத்தியை காட்டி மிரட்டி உள்ளார்கள்.
இச்சம்பவம் அறிந்த பசுபதிபாளையம் காவல்துறையினர் மணிகண்டன் அசோக் ராஜ் கார்த்திக் ஆகியோரை கைது செய்து அவரிடமிருந்து பட்டாக் கத்தியை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இச்சம்பவத்தில் ஈடுபட்ட அசோக், முழியன் ,பாலன் , பழம் ராஜா மற்றும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
பீதியை ஏற்படுத்தும் வகையில் குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் எச்சரிக்கை செய்துள்ளார்.