தந்தையை கொன்று துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் போட்டு புதைத்த மகன்.. அதிர வைக்கும் காரணம்..!
விசாரணையில் சொத்து தகராறில் தந்தையைக் கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி, பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து, ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே குணசேகரன் குழிதோண்டி புதைத்தது தெரியவந்தது.
சென்னை வளசரவாக்கத்தில் சொத்து தகராறு காரணமாக தந்தையை சரமாரியாக அடித்து கொலை செய்து விட்டு அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி டிரம்மில் போட்டு புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் ஆற்காடு ரோடு பகுதியை சேர்ந்தவர் குமரேசன்(80). ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர். இவருக்கு குணசேகரன் (55) என்ற மகனும், காஞ்சனா, பரிமளா, யமுனா என்ற 3 மகள்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. குமரேசனுக்கு சொந்தமான அடுக்குமாடி வீட்டின் முதல் தளத்தில், அவரது மகன் குணசேகரன் எலக்ட்ரீசியன் வேலை செய்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். 2வது தளத்தில் குமரேசன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி மூத்த மகள் காஞ்சனா தந்தை வீட்டுக்கு வந்துள்ளார். அவரது அறை பூட்டி இருந்ததால், குணசேகரனிடம் விசாரித்துள்ளார். ஆனால், சரியான பதில் அளிக்காததால் சந்தேகமடைந்த மகள் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, ரத்த வாடை மற்றம் ரத்த கரை படிந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காஞ்சனா வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துவதை அறிந்த குணசேகரன் தலைமறைவானார்.
விசாரணையில் சொத்து தகராறில் தந்தையைக் கொன்று, உடலை துண்டு துண்டாக வெட்டி, பிளாஸ்டிக் டிரம்மில் அடைத்து, ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகே குணசேகரன் குழிதோண்டி புதைத்தது தெரியவந்தது. இதனையடுத்து, குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.