ஹாஸ்டலில் மாணவிகளுக்கு சீண்டல்... பள்ளி முதல்வரை தட்டித் தூக்கிய போலீஸ்....!
ஜார்கண்ட் மாநிலத்தில் தனியார் பள்ளி மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்தனர்.
பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக எண்ணற்ற சட்டங்கள் இருந்த போதிலும் குற்றங்கள் குறைவதாக தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாடெங்கும் அரங்கேறிக் கொண்டு தான் இருக்கின்றன.
அந்த வகையில், ஜார்கண்ட் மாநிலத்தில் தனியார் பள்ளி மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பள்ளி முதல்வரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விசாரணை:
பள்ளியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருக்கும் ஏழு மாணவிகள் பள்ளி முதல்வர் மீது புகார் அளித்தனர் என்று ஜார்கண்ட் மாநிலத்தின் சைபசா போலீசார் தெரிவித்து உள்ளனர். மாணிவகள் கொடுத்த புகாரின் பேரில் சைபசா காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு குற்றம்சாட்டப்பட்ட பள்ளி முதல்வரை கைது செய்தனர்.
“மைனர் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தனியார் பள்ளியை சேர்ந்த முதல்வர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் மீது ஏழு மாணவிகள் குற்றம்சாட்டி உள்ளனர். புகார் அளித்த அனஐத்து மாணவிகளும் பள்ளி விடுதியில் தங்கியுள்ளனர்,” என சைபசா போலீஸ் அதிகாரி தெரிவித்தார். கைது செய்யப்பட்ட பள்ளி முதல்வர் நீதிமன்ற காவலில் உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.