9 மாத கர்ப்பிணியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கொள்ளையர்கள்..! 5 பவுன் நகைக்காக வெறிச்செயல்..!
வேடசந்தூர் அருகே கர்ப்பிணி பெண்ணை கொடூரமாக தாக்கி கொலை செய்த மர்ம நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்தவர் தினேஷ்குமார்(25). இவரது மனைவி சுஷ்மிதா(20). இந்த தம்பதியினருக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. தினேஷ்குமார் அந்த பகுதியில் இருக்கும் ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வருகிறார்.
சுஷ்மிதா தற்போது 9 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். கவுண்டச்சிபட்டியில் இருக்கும் தனது கணவரது பெற்றோர் வீட்டில் அவர் பிரசவத்திற்காக தங்கி இருக்கிறார். இந்த நிலையில் அருகே இருக்கும் வயல் பகுதிக்கு இன்று காலை அவர் நடந்து சென்றுள்ளார். அவர் தனியாக செல்வதை நோட்டமிட்ட மர்மநபர்கள் சிலர் அவரை பின்தொடர்ந்துள்ளனர்.
ஆள் யாரும் இடத்தில் திடீரென அந்த கும்பல் சுஷ்மிதாவை வழிமறித்துள்ளது. அவரை மிரட்டி நகைகளை கழற்றி கொடுக்க கூறியிருக்கின்றனர். அதற்கு சுஷ்மிதா மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள் கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் சரமாரியாக தாக்கி அவரை கீழே தள்ளியுள்ளனர். பின்னர் சுஷ்மிதா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்து தப்பி ஓடிவிட்டனர்.
கொள்ளையர்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த சுஷ்மிதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வெகு நேரமாகியும் மனைவியை காணாததால், தினேஷ் குமார் அவரை தேடி வந்துள்ளார். அப்போது வயல்வெளி பகுதியில் சுஷ்மிதா உயிரற்று கிடப்பது பார்த்து கதறி துடித்தார். தகவல் அறிந்து உறவினர்கள் திரண்டு வந்தனர். அவர்கள் சுஷ்மிதாவை அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. விரைந்து வந்த வேடசந்தூர் காவலர்கள் விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உண்மையில் இது நகைக்காக நடந்த கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.