தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தை இறந்த விவகாரம் தொடர்பாக  பெண் மீது வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர் காவல் துறையினர். 

கோவை செட்டிவீதி அருகே உள்ள உப்புக்கார வீதியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் நகை பட்டறை தொழிலாளியாக அருகில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.. இவருடைய மனைவி புண்ணியவதி. இவருக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் புண்ணியவதி மீண்டும் 4வது முறையாக கர்ப்பம் ஆனார். 4-வது குழந்தை என்பதால் மனவருத்தத்துடன் இருந்ததாக தெரிகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பிரசவ நேரம் நெருங்கி வந்தும் கூட, மருத்துவமனை செல்லாமல் வீட்டிலேயே தங்கி இருக்கிறார். நிறைமாத கர்ப்பிணியான அவர், வீட்டில் வைத்து தனக்குத்தானே பிரசவம் பார்த்தார் என்று கூறப்படுகிறது. இந்த 4 வது பிரசவத்தில் புண்ணியவதிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. இதில் தொப்புள்கொடி சரியாக அறுபடவில்லை. பிரசவமும் சரியாக இல்லாததால் குழந்தையும், தாயும் மயங்கினர். 

இதனை கேள்விப்பட்ட அவருடைய குடும்பத்தினர் 2 பேரையும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சரியாக பிரசவம் பார்க்காதால், குழந்தை இறந்துவிட்டது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகடை வீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, இது தொடர்பாக விசாரணை நடத்தினார். புண்ணியவதி மீது இந்திய தண்டனை சட்டம் 315-( குழந்தை செத்துப்பிறக்க வேண்டும் அல்லது பிறந்த உடன் சாக வேண்டும் என்று செயல்படுவது) என்ற பிரிவின்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், அவர்கள் குடும்பத்தினர் மற்றும் அருகில் இருப்பவர்களை விசாரித்து வருகின்றனர்.