500 ரூபாய் கொடுத்தா போதும்.. தங்க நாணயம் கிடைக்கும் - பெண்களை ஏமாற்றி தர்ம அடி வாங்கிய சொகுசு ‘திருடன்’
தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருக்கு வயது 42ஆகும்.
இவர் மேற்கு தாம்பரம், சி. டி. ஓ. , காலனி, மூன்றாவது பிரதான சாலையில், 'காயின் பிளஸ்' என்ற பெயரில் தனியார் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது நிறுவனத்தில் பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தைச் சேர்ந்த அனுராதா, 36 என்ற பெண் பணியாற்றினார். இவர், வெங்கடேஷ் தன்னிடம் பணம் பெற்று, தங்க நாணயம் வழங்குவதாகக் கூறி, ஏமாற்றியதாக, தாம்பரம் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் அளித்தார்.
இதையடுத்து, வெங்கடேஷ் மற்றும் அவரது அலுவலகத்தில், கணக்காளராக பணிபுரியும் அனிதா, 44, ஆகியோரிடம் தாம்பரம் போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, இருவரும் கைது செய்யப்பட்டனர். இது குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது, ‘வெங்கடேஷ் மற்றும் அனிதா ஆகிய இருவரும், எம். எல். எம். , எனப்படும், 'மல்டி லெவல் மார்க்கெட்டிங்' முறையில், 500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை செலுத்தும் நபர், தனக்கு கீழ், சங்கிலி தொடராக ஆட்களை சேர்த்தால், சேர்க்கும் ஆட்களுக்கு ஏற்ப தங்கம் தருவதாக கூறியுள்ளனர்.
இதனை நம்பி, ஏராளமானோர் ஏஜன்ட்களாக சேர்ந்து, பணம் செலுத்தியதுடன், தங்க நாணயமும் வாங்கி உள்ளனர். அவர்களில், அனுராதா என்பவரும், ஏஜன்ட்டாக சேர்ந்து, 3, 000 பேரை சேர்த்துள்ளார்; அவர்களில், 199 பேருக்கு மட்டும், தங்க நாணயங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களுக்கு, நாணயம் வழங்காமல், வெங்கடேஷ் மற்றும் அனிதா இருவரும், ஏமாற்றி வந்துள்ளனர். அனுராதா அளித்த புகாரின்படி, மேற்கண்ட இருவரிடம் விசாரித்ததில், பலரிம் பணம் பெற்று, 10 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்’ என்று கூறினர்.