கணவர் நடத்தையில் சந்தேகப்படுவதை அறிந்த மனைவி 2 குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணவர் நடத்தையில் சந்தேகப்படுவதை அறிந்த மனைவி 2 குழந்தைகளை தூங்க வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே உள்ள பெரியவிளையை சேர்ந்தவர் செந்தில். இவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஞானபாக்கியபாய் (33) இவர் கொட்டாரம் பஞ்சாயத்து அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டத்தில் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் சிங்கப்பூரில் உள்ள தனது கணவர் செந்திலுடன் பேசுவது வழக்கம். அந்த வகையில் கணவர் செந்திலுடன் திங்கட்கிழமை இரவு ஞானபாக்கியபாய் வாட்ஸ் அப் வீடியோகாலில் பேசிக்கொண்டிருந்தார்.

இதையும் படிக்க;- 550 சவரன் நகையும் குடிச்சி தீர்த்துட்டேன்.. தொழிலதிபரை மடக்கிய மாடல் அழகி பகீர்..

அப்போது கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், மனைவியின் பின்னால் யாரோ மறைந்திருப்பதாக சந்தேகித்த செந்தில் மனைவியை செல்போன் கேமராவை அறை முழுவதும் தெரியுமாறு காண்பிக்க கூறியுள்ளார். உடனடியாக மனைவி படுக்கை அறையை முழுமையாக காண்பித்த நிலையில் சந்தேகம் தீராத செந்தில் மனைவியிடம் செல்போன் கேமராவை கட்டிலுக்கு அடியில் திருப்பி காண்பிக்குமாறு கூறி சண்டையிட்டுள்ளார். 

கணவர் நடத்தையில் சந்தேகப்படுவதை அறிந்த ஞானபாக்கியபாய் தனது 2 குழந்தைகளையும் தூங்க வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையில் சிங்கப்பூரில் இருந்து அவரது கணவர் செந்தில் அருகில் உள்ள உறவினர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. உடனே அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் செந்திலின் வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது ஞான பாக்கியபாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் பிணமாக தொங்கியது தெரிய வந்தது.

இதையும் படிக்க;- பார்த்ததுமே பத்திக்கிச்சு! புகார் கொடுக்க வந்த பெண்ணை கரெக்ட் செய்த எஸ்.ஐ! கதறிய கணவர் தற்கொலை.. ஆடியோ வைரல்

 உடனே இது பற்றி கன்னியாகுமரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.