பெண்ணுக்கு கொலை மிரட்டல்... தாதாவாக வலம் வந்த பிரபல ரவுடி படப்பை குணா அதிரடி கைது..!
பிரபாவதி நிலத்தின் பட்டாவை பெற்றுச் சென்றதால் குணா தனது அடியாட்களை விட்டு பிரபாவதியை மிரட்டியுள்ளார். இது தொடர்பாக பிரபாவதி சுங்குவார் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, ரவுடி குணா (எ) படப்பை குணா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
காஞ்சிபுரம் அருகே சொத்து பிரச்சனை தொடர்பாக பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பிரபல ரவுடி படப்பை குணாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாவதி என்பவர் அவரது தாய், தந்தையருக்கு சொந்தமான நிலத்தின் சந்தை மதிப்பு விவரத்தினை பார்ப்பதற்காக பட்டா விண்ணப்பித்து வாங்கியுள்ளார். சுங்குவார் சத்திர காவல் நிலைய பிரபல ரவுடி மதுரமங்கலத்தைச் சேர்ந்த குணா என்ற படப்பை குணா என்பவரிடம் பிரபாவதியின் தந்தை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 2 லட்சம் கடன் பெற்றுள்ளார். இதனால் குணா தற்போது அந்த நிலத்தின் ஆவணத்தை கேட்டு மிரட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் பிரபாவதி நிலத்தின் பட்டாவை பெற்றுச் சென்றதால் குணா தனது அடியாட்களை விட்டு பிரபாவதியை மிரட்டியுள்ளார். இது தொடர்பாக பிரபாவதி சுங்குவார் சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, ரவுடி குணா (எ) படப்பை குணா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர், குணா தலைமறைவாகி விட்டார். அவரை தேடி வந்த நிலையில் சுங்குவார்சத்திரம் போலீசார் கைது செய்தனர். குணா மீது காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி மற்றும் அடிதடி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.