பிரபாகரனின் நண்பர்களான கார்த்திக், குணசேகரன், வினோத்கண்ணன் ஆகியோரும் சென்றனர். நண்பருடன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றபோது திடீரென அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரபாகரனை சரமாரியாக வெட்டியது.
நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற புது மாப்பிள்ளை வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிறந்தநாள் விழா
திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தன்நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் திமுக ஒன்றிய அவைத் தலைவராக உள்ளார். இவரது மகன் பிரபாகரன் (26). தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் தென்றல் தேன்மொழி என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்நிலையில், நேற்று இரவு பிரபாகரன் சிலுவத்தூர் சாலை ஏர்போர்ட் நகரில் உள்ள தனது போலீஸ் நண்பரான சூர்யாவின் பிறந்தநாள் விழாவுக்கு செல்வதாக தனது மனைவியிடம் கூறிச் சென்றார்.

புதுமாப்பிள்ளை படுகொலை
அவருடன் பிரபாகரனின் நண்பர்களான கார்த்திக், குணசேகரன், வினோத்கண்ணன் ஆகியோரும் சென்றனர். நண்பருடன் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றபோது திடீரென அங்கு பயங்கர ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பல் பிரபாகரனை சரமாரியாக வெட்டியது. இதை தடுக்க சென்ற நண்பர்களுக்கும் வெட்டு விழுந்தது. இதனையடுத்து, அக்கும்பல் அங்கிருந்து தப்பியது. படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பிரபாகரனை சக நண்பர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரபாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணை
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது பெண் பிரச்சினையால் ஏற்பட்டதா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகின்றனர். திருமணமான 15 நாளில் புதுமாப்பிள்ளை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
