#BREAKING தமிழகத்தை பதைபதைக்க வைத்த மருத்துவர் கொலை வழக்கு.. 7 பேருக்கு தூக்கு, 2 பேருக்கு ஆயுள் தண்டனை..!
பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனையும், 2 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
2013-ம் ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், பிரபல நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் வெட்டப்பட்டார். தலை, கழுத்து, கை என்று 20-க்கும் மேற்பட்ட வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்தக் கொலை சம்பவம் தொடர்பாக, சுப்பையாவின் மைத்துனர் ஏ.ஏ.மோகன் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்த அபிராமபுரம் காவல்துறையினர், அரசுப் பணியில் இருந்த ஆசிரியர்கள் பொன்னுசாமி, மேரி புஷ்பம், வழக்கறிஞர் பாசில், வில்லியம், மருத்துவர் ஜேம்ஸ் சதீஷ்குமார், பொறியாளர் போரிஸ், கூலிப்படையைச் சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன், முருகன், செல்வபிரகாஷ், ஐயப்பன் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.
வழக்கு நடைபெற்ற காலத்தில் ஐயப்பன் அப்ரூவர் ஆகிவிட்டார். கடந்த 6 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கொரோனா காலத்திலும் நேரடி விசாரணையாக தினந்தோறும் நடைபெற்றது. அனைத்து தரப்பு வாதங்கயைும் கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு வழங்கினார். அதில், கூலிப்படையை சேர்ந்த ஐயப்பனை தவிர குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று சென்னை முதலாவது அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில், தற்போது தண்டனை விவரத்தை நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அதில், பொன்னுசாமி, வழக்கறிஞர் பாசில், வில்லியம், சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்லபிரகாஷ் ஆகியோருக்கு தூக்கு தண்டனையும், மேரி புஷ்பம், கூலிப்படையை சேர்ந்த கபடி வீரர் ஏசுராஜன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து நீதிபதி அல்லி தீர்ப்பு வழங்கியுள்ளார். 10 பேரில் ஐயப்பன் அப்ரூவர் ஆன நிலையில் குற்றவாளிகள் 9 பேருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.