ஐயோ அம்மா என்ன காப்பாத்துங்க.. பட்டப்பகலில் பொதுமக்கள் மத்தியில் 17 வயது சிறுவன் ஓட ஓட விரட்டி படுகொலை.!
இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சீனிவாசனை வழிமறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தப்பித்து ஓடினார். ஆனால், சிறுவனை விடாமல் துரத்தி சென்று ஓட ஓட விரட்டி வெட்டினர்.
சென்னை தண்டையார்பேட்டையில் பட்டப்பகலில் பொதுமக்கள் மத்தியில் 17 வயது சிறுவன் ஓடஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த சிறுவன் சீனா என்கின்ற சீனிவாசன்(17). ரவுடியான இவர் மீது, வழிப்பறி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பசுபதி என்பவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதை சீனிவாசன் கண்டித்து பசுபதியை எச்சரித்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் பசுபதி அந்த பெண்ணை தொடர்ந்து காதலித்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சீனிவாசன் நண்பர்களுடன் சேர்ந்து பசுபதியை வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், பசுபதி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தகவல் அறிந்த பசுபதி உறவினர்கள் சீனிவாசன் உள்ளிட்ட கூலிப்படையை தேடி வந்தனர். இந்நிலையில், சீனிவாசன் தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே தனியாக சென்றுக்கொண்டிருப்பதாக பசுபதியின் உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இருசக்கர வாகனத்தில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சீனிவாசனை வழிமறித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாசன் தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தப்பித்து ஓடினார். ஆனால், சிறுவனை விடாமல் துரத்தி சென்று ஓட ஓட விரட்டி வெட்டினர். இதில், படுகாயமடைந்த சிறுவன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். பின்னர், அந்த கும்பல்இருசக்கர வாகனத்தில் ஏறி, மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றது. இந்த கொலை தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். 17 வயது சிறுவன் பட்டப்பகலில் ஓட ஒட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.