கடனுக்கு சிகரெட் தர மறுத்த கடைக்காரரை கொலை செய்த சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

சொத்துக்காக மட்டுமல்ல. ஒரு பீடிக்காவும் கொலை நடந்திருக்கிறது. இப்போது மதுரையில் கடனுக்கு சிகரெட் தர மறுத்ததால் கடையின் உரிமையாளரை மூன்று இளைஞர்கள் அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மதுரை மாவட்டம், சமத்துவபுரத்தில் பெட்டிக்கடை நடத்தி வந்தவர் வினோத். அதே பகுதியைச் சேர்ந்த அருண்பாண்டி, கார்த்திக், ஜோதிமணி ஆகிய மூன்று இளைஞர்கள் வினோத்தின் கடைக்கு வந்துள்ளனர். அங்கே வந்த அவர்கள் கடைக்காரரான வினோத்திடம் கடனுக்கு சிகரெட் கேட்டுள்ளனர். ஏற்கனவே இந்த இளைஞர்கள் கடையில் கடன் பாக்கி வைத்துள்ளதால், வினோத் கடனாக சிகரெட் தர முடியாது என கறாராக மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மூன்று பேரும் வினோத்தை கடுமையாகத் தாக்கினர். அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் வந்து தடுப்பதிற்குள் அவர்கள் மூன்று பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். பின்னர் பலத்த காயமடைந்திருந்த வினோத்தை அருகே இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

பின்னர், இதுபற்றி தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த போலிஸார் விசாரணை நடத்தி வினோத்தை தாக்கிய மூன்று இளைஞர்களைக் கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடனுக்கு சிகரெட் தர மறுத்த கடைக்காரரை கொலை செய்த சம்பவம் மதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.