பயங்கரம்.. தலை துண்டித்து ரவுடி கொடூர கொலை.. குற்றவாளியை சுற்றி வளைத்து என்கவுன்ட்டரில் போட்டு தள்ளிய போலீஸ்
பண்ருட்டி அருகே நேற்றிரவு ரவுடி ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு ரவுடி இன்று அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பண்ருட்டி அருகே நேற்றிரவு ரவுடி ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த மற்றொரு ரவுடி இன்று அதிகாலை என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
கடலூர் பூந்தோட்டத்தைச் சேர்ந்த ரவுடி வீரா என்ற வீராங்கன் (35). இவர் மீது ஏற்கெனவே 10 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று இரவு அவரது வீட்டின் அருகே அமர்ந்திருந்த போது பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டியது. பின்னர், தலையை துண்டித்து கொலை செய்துவிட்டு மர்ம கும்பல் தப்பிச்சென்றது. இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தலையில்லாத வீராவின் உடலை கைப்பற்றி முண்டியபாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொடூர கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் வீராவுக்கும், கிருஷ்ணா என்ற ரவுடிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்த நிலையில், கொலை நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. கொலைக்கு காரணமான கிருஷ்ணாவை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில், பண்ருட்டி அருகே குடுமியான்குப்பம் பகுதியில் பதுங்கி இருந்த குற்றவாளிகள் 7 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். அதில், கொலை செய்த கிருஷ்ணன் என்பவரை கைது செய்ய முயன்றபோது, எஸ்.ஐ. தீபன் என்பவரை தாக்கிவிட்டு, தப்பியோட முயன்றுள்ளார். இதனையடுத்து, போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் கிருஷ்ணன் சுட்டுக்கொல்லப்பட்டார். ரவுடி கிருஷ்ணா தாக்கப்பட்டதில் காயமடைந்த தீபன் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதனையடுத்து, என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக பண்ருட்டி மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி வருகிறார்.