விருதுநகர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தாயின் கள்ளக்காதலன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தாய் ஆகிய இருவரையும் போக்சோ வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். 

விருதுநகர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக தாயின் கள்ளக்காதலன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தாய் ஆகிய இருவரையும் போக்சோ வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். தமிழகத்தில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சிறுமிகள் முதல் கல்லூரி செல்லும் பெண்கள் வரை தினந்தோறும் பல்வேறு பாலியல் தொல்லைகளை சந்தித்து வருகின்றனர். அரசு கடும் நடவடிக்கை எடுத்தாலும் இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது. வெளியே தான் இதுபோன்ற பிரச்சனை என்றால் வீட்டிலும் அவை தொடர்கின்றன. உறவினர்கள் முதல் தந்தை, தாயே இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் அண்மை காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் விருதுநகர் அருகே தனது மகளுக்கு கள்ளக்காதலன் பாலியல் துன்புறுத்தல் செய்வது தெரிந்தும் அதற்கு தாய் உடைந்தையாக இருந்த சம்வம் அரங்கேறி உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு கீழத் தெருவை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு அவரது தாய் உடந்தையோடு ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் குறித்து குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகாரளிக்க அரசு ஏற்பாடு செய்துள்ள தொலைப்பேசி எண்ணான 1098க்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜானகி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை இறந்துவிட்டதால் தாய் பூபதிக்கும், கூனம்பட்டியைச் சேர்ந்த பாண்டிமுருகன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதையடுத்து, இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாண்டிமுருகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி தாயிடம் அச்சிறுமி கூறியுள்ளார். ஆனால் இதுபற்றி யாரிடமும் கூறக் கூடாது என்று அச்சிறுமியை தாய் கண்டித்து, கையால் அடித்து காயப்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்து, வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சமூக பணியாளர் ஜானகி புகார் அளித்தார். இதையடுத்து, போக்சோ வழக்குப் பதிவு செய்து பாண்டி முருகன் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பூபதி ஆகியோரை போலீஸார் கைதுசெய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.