அமைச்சர்கள் பெயரை சொல்லி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த ஆசாமியை காவல்துறையினர் கைது செய்து விசாரணையில் மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமைச்சர்கள் பெயரை சொல்லி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்த ஆசாமியை காவல்துறையினர் கைது செய்து விசாரணையில் மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. மயிலாடுதுறை மேல ஒத்தசரகு தெருவில் வசித்து வருபவர்கள் விஜயகுமார்-வெற்றிச்செல்வி தம்பதி. இவர்களிடம் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையை சேர்ந்த முருகன் நட்பாக பழகி வந்துள்ளார். அப்போது, தான் தனியார் வங்கியில் மேலாளராக வேலை பார்ப்பதாகவும், பணிமாறுதலில் மயிலாடுதுறை கிளைக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகவும் அமைச்சர்களை தனக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார். இதுமட்டுமின்றி அரசு வேலை வாங்கி தருவதாக வெற்றிச்செல்விக்கு முருகன் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதற்கு வெற்றிச்செல்வியின் கணவர் விஜயகுமார் மறுப்பு தெரிவித்த நிலையில், தனக்கு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை தெரியும் என்றும், அதன் மூலம் பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக முருகன் நம்பவைத்துள்ளார். இதனை நம்பிய வெற்றிச்செல்வி தனது நகைகளை அடமானம் வைத்து கணவரை கட்டாயப்படுத்தி ஆசிரியை வேலைக்காக ரூபாய் 8.5 லட்சம் பணத்தை கடந்த அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி முருகனிடம் கொடுத்துள்ளார். அமைச்சரின் உதவியாளரிடம் பணத்தை கொடுத்து அதற்கான கடிதத்தை வாங்கி தருவதாக கூறி வெற்றிச்செல்வியின் கணவர் விஜயகுமாரை அழைத்துகொண்டு திருச்சி சென்ற முருகன், நீங்கள் காரிலேயே இருங்கள் அமைச்சரின் உதவியாளரை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறிசென்றவர் பலமணி நேரம் ஆகியும் ஆள் வரவில்லை. கார் டிரைவரை கேட்டபோது வாடகைக்கு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர் மற்றும் வெற்றிச்செல்வி பல இடங்களில் விசாரித்து எந்த தகவலும் கிடைக்காததால் கடந்த நவம்பர் மாதம் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் இது குறித்து புகார் செய்தார். அதன்பேரில் மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் உதவி ஆய்வாளர் இளையராஜா, சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ், நரசிம்மபாரதி, கார்த்திக் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து முருகனை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் முருகனை மயிலாடுதுறையில் வாகன சோதனையின் போது கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் வெற்றிச்செல்வி போன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் படித்த பெண்களை குறி வைத்து வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து முருகனை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
