பெண்ணை துண்டுதுண்டாக வெட்டி வெறித்தனமாக கொலை செய்த இளைஞர்..! கோவையை உலுக்கிய சம்பவத்தில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!
கோவையில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த திருநெல்வேலியை சேர்ந்த வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் ஒரு தனியார் அடுக்கு மாடி குடியிருப்பு இருக்கிறது. அதன் முதல் தளத்தில் நடராஜ்(60) என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி சரோஜா(54) .இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். அவருக்கு திருமணமாகி மனைவியுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். மகனும் மருமகளும் வேலை காரணமாக அலுவலகத்திற்கு சென்று விடுவார்கள். நடராஜன் மற்றும் சரோஜா மட்டும் பகல் நேரத்தில் தனியாக இருந்து வந்துள்ளனர்.
இவர்களது வீட்டின் அருகில் திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த யாசர் அராபத்(29) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செல்போன் கோபுரம் அமைக்கும் வேலை பார்த்து வந்திருக்கிறார். வயது முதிர்வு காரணமாக சரோஜாவுக்கு கை நடுக்கம் இருந்துள்ளது. இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் சின்ன சின்ன வேலைகளுக்காக யாசர் அராபத்தை உதவிக்கு அழைப்பது வழக்கம் என்று தெரிகிறது. அவரும் உதவி செய்துள்ளார்.
இதனிடையே கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பகல் நேரத்தில் நடராஜன் வெளியே சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த சரோஜா கியாஸ் அடுப்பை பற்ற வைப்பதற்காக யாசர் அராபத் அழைக்க முடிவு செய்து இருக்கிறார். இதற்காக அவருடைய வீட்டிற்கு சென்ற சரோஜாவை கத்தியால் சரமாரியாக யாசர் அராபத் குத்திக் கொலை செய்திருக்கிறார். பின்னர் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம், கம்மல் ஆகியவற்றை திருடிக்கொண்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட உடலை வெளியே கொண்டு செல்ல முடியாத காரணத்தால் துண்டு துண்டாக வெட்டி தனித்தனி சூட்கேஸில் போட்டு மறைத்து வைத்திருக்கிறார். இடுப்புக்கு கீழே இருக்கும் பகுதியை வீட்டின் அலமாரியில் வைத்து சிமெண்டால் பூசியுள்ளார். பிறகு வீட்டை பூட்டி விட்டு யாசர் அரபாத் வெளியேறியுள்ளார்.இதனிடையே சரோஜாவை காணாமல் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி உள்ளனர். அப்போது யாசர் அராபத்தும் எதுவும் தெரியாதது போல அவருடன் சேர்ந்து காணாமல் போன சரோஜாவை தேடியுள்ளார். இதனால் அவர் மீது யாருக்கும் சந்தேகம் எழவில்லை. பின்னர் அங்கிருந்து வெளியேறிய யாசர் அராபத் அதன் பிறகு வீட்டிற்கு திரும்பவில்லை.
இந்த நிலையில் ஒரு வாரம் கழித்து யாசர் அராபத் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் யாசர் அராபத்தின் வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு சரோஜாவின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அழுகிய நிலையில் இருந்தது. இதனால் சரோஜாவை கொலை செய்தது யாசர் அராபத் தான் என்று போலீசார் முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்ட யாசர் அராபத் விசாகப்பட்டினத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்று யாசர் அராபத் கையும் களவுமாக கோவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் சரோஜாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இது சம்பந்தமான வழக்கு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் குற்றம் சாட்டப்பட்ட யாசர் அராபத்திற்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் 20 ஆயிரம் அபராதமும் விதித்கப்பட்டுள்ளது.