கொடி கட்டி பறந்த கஞ்சா விற்பனை .. தட்டிக் கேட்ட ஊர் தலைவர் கழுத்தறுத்து கொலை ..
காஞ்சிபுரம் அருகே கஞ்சா விற்றதை தட்டிக் கேட்ட ஊர்த்தலைவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
காஞ்சிபுரம் அருகே இருக்கும் கோவிந்தவாடி அகரம் பகுதியை சேர்ந்தவர் தனஞ்செயன் . இவர் அந்த பகுதியில் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார் . இதற்கு முன்னர் தனஞ்செயன் ஊர்தலைவராக இருந்து இருக்கிறார் .
இந்த நிலையில் அந்த பகுதியில் கஞ்சா விற்பனை அதிகளவில் நடந்துள்ளது . புருஷோத்தமன் என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார் . இது சம்பந்தமாக புருசோத்தமனை பலமுறை தனஞ்செயன் கண்டித்துள்ளார் . எனினும் அவர் கஞ்சா விற்பனையை தொடர்ந்து நடத்தி வந்திருக்கிறார்.
இதுகுறித்து அங்குள்ள காவல் நிலையத்தில் தனஞ்செயன் புகார் அளித்தார் . காவல்துறையினர் புருசோத்தமனை அழைத்து விசாரணை நடத்தி உள்ளனர் . இதனால் ஆத்திரம் அடைந்த அவர் , புகாரை திரும்ப பெறுமாறு தனஞ்செயனை வற்புறுத்தி இருக்கிறார் .ஆனால் அதனை தனஞ்செயன் மறுத்து விட்டார் .
இந்த நிலையில் 20 கூலிப்படை ஆட்களோடு தனஞ்செயன் வீட்டிற்கு சென்ற புருசோத்தமன் , அவரை சரமாரியாக வெட்டியுள்ளார் . இதில் சம்பவ இடத்திலேயே தனஞ்செயன் பலியானார் . அவரது குடும்பத்தினர் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தப்பியோடிய கொலையாளிகளை காவல் துறையினர் தனிப் படை அமைத்து தேடி வருகின்றனர் .