கன்னியாகுமரியில் பயங்கரம்.. 50 அடி பள்ளத்தில் மனைவியை தள்ளிய கணவர்.. ஆத்திரம் தீராமல் கல்லை போட்டு கொன்ற கொடூரம்!!
கன்னியாகுமரியில் குடும்பத்தகராறில் மனைவியை பள்ளத்தில் தள்ளிவிட்டு கல்லை போட்டு கொன்ற கொடூர கணவரை காவல்துறை கைது செய்துள்ளது.
கன்னியாகுமரியில் இருக்கும் சிலுவைநகர் பகுதியைச் சேர்ந்தவர் மரிய டல்லஸ். இவரது மனைவி அருள் சுனிதா. இந்த தம்பதியினருக்கு திருமணமாகி 17 வருடங்கள் ஆகின்றது. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கின்றனர். மரிய டல்லஸ் தள்ளுவண்டியில் பேன்ஸி பொருட்கள் விற்பனை செய்யும் தொழில் பார்த்து வருகிறார்.
குடும்ப பிரச்சனைகள் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதனிடையே நேற்று இருவரிடையேயும் மீண்டும் வாக்குவாதம் நடந்துள்ளது. அப்போது மரிய டல்லஸ், தனது மனைவியை சரமாரியாக தாக்கியிருக்கிறார். இதில் காயமடைந்த வனிதா, வலியால் துடித்திருக்கிறார்.
வீட்டில் இருந்து வெளியே தப்பி ஓட முயன்ற அவரை விடாமல் துரத்திச் சென்ற மரிய டல்லஸ், அங்கிருந்த 50 அடி ஆழ பள்ளத்தில் தள்ளியிருக்கிறார். பின்னர் கல்லைத் தூக்கி வனிதா மேல் அவர் போட்டதாக தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த வனிதா உயிருக்கு போராடியிருக்கிறார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே வனிதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து சுனிதாவின் தாயார் ரீத்தம்மாள் அளித்த புகாரின் பேரில் மரிய டல்லஸை கைது செய்த காவல்துறையினர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். சுனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குடும்பத்தகராறில் மனைவியை கல்லை போட்டு கணவர் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.