மனைவியுடன் தகராறு..! ஒரு வயது மகனை கொன்று தற்கொலை செய்த தந்தை..!
திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே மாரி கண்ணனுக்கும் அவரது மனைவி சங்கரேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனைகள் சம்பந்தமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் சரிவர பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.
சாத்தூர் அருகே இருக்கிறது போத்திரெட்டிபட்டி கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் மாரி கண்ணன்(29). இவர் கடந்த இரு வருடங்களுக்கு முன்பு தனது அத்தை மகளான சங்கரேஸ்வரி(23) என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு மவுனி கணேஷ் என்று ஒரு வயதில் ஆண் குழந்தை இருந்துள்ளது. தனியார் கார் மற்றும் வேன்களுக்கு ஓட்டுனராக மாரி கண்ணன் பணியாற்றி வந்தார். திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே மாரி கண்ணனுக்கும் அவரது மனைவி சங்கரேஸ்வரிக்கும் இடையே அடிக்கடி குடும்பப் பிரச்சனைகள் சம்பந்தமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் சரிவர பேசிக்கொள்ளாமல் இருந்துள்ளனர்.
இதனிடையே தற்போது கொரோனா பரவுதல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் மாரி கண்ணன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது மீண்டும் கணவன்-மனைவி இடையே தொடர்ந்து சண்டை நிகழ்ந்து வந்துள்ளது. இதனால் மன வருத்தத்தில் இருந்த மாரி கண்ணன் தற்கொலை செய்ய முடிவெடுத்திருக்கிறார். இறந்த பிறகு குழந்தையை விட்டு செல்ல மனமில்லாத அவர் தனது ஒரு வயது மகனை கொல்ல முடிவெடுத்திருக்கிறார். அதன்படி தனது குழந்தைக்கு விஷம் கொடுத்த மாரி கண்ணன் தானும் அதே விஷத்தை அருந்தியிருக்கிறார்.
அதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக வாகனம் ஒன்றின் மூலமாக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு இருவரையும் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் இருவருக்கும் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த காவலர்கள் இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைகு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்திருக்கும் இருக்கன்குடி காவல்துறையினர் மாரி கண்ணனின் மனைவி சங்கரேஸ்வரியிடமும் உறவினர்களிடமும் விசாரணையைத் தொடங்கி இருக்கின்றனர்.