போலீஸ் ஸ்டேசன் அருகே இளைஞர் ஓட ஓட விரட்டி படுகொலை... மதுரையில் பதற்றம்..!
மதுரையில் பட்டப்பகலில் போலீஸ் ஸ்டேசனுக்கு கையெழுத்து போட இளைஞரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் பட்டப்பகலில் போலீஸ் ஸ்டேசனுக்கு கையெழுத்து போட இளைஞரை மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெயம். இவரது மகன்கள் ரஞ்சித், அஜித் இவர்கள் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெட்டு குத்து வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் நிபந்தனை ஜாமீனில் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். தினமும் தல்லாகுளம் காவல் நிலையத்தில் கையெழுத்திடவும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் காவல் நிலையத்தில் ரஞ்சித்தும், அஜித்தும் கையெழுத்து போட வந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல் அஜித்தை ஓட ஓட விரட்டி காவல் நிலையம் அருகே வைத்து கொடூரமாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது. இதில் ரஞ்சித் என்பவர் படுகாயமடைந்தார். இதுதொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கடந்த மாதம் செல்லூர் பகுதியில் திருவிழாவின் போது விக்கி என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளதும் அதன் காரணமாகவே இந்த படுகொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சம்பவம் நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.