கார்த்திக், நிஷாந்த் இருவரையும் ஒரே நேரத்தில் காதலித்ததாகவும், கார்த்திக்கை திருமணம் செய்ய தனக்கு பிடிக்காததால் நிஷாந்துடன் சேர்த்து வைக்க போலீஸாரிடத்தில் அம்மு வேண்டுகோள் விடுத்தார். 

ஒரே நேரத்தில் இருவரை காதலித்து விட்டு ஒரு காதலனுடன் திருமண வரவேற்பு வரை சென்றுவிட்டு தாலி கட்டுமுன் மற்றொரு காதலனுடன் எஸ்கேப் ஆன இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை, நுங்கம்பாக்கம், வள்ளுவர் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் அம்மு. தனியார் ஷோரூமில் பணிபுரிந்து வந்துள்ளார். திருநின்றவூரைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞரிடத்தில் ஃபேஸ்புக் மூலம் அம்முவுக்கு அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும், கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாரும் திருமணத்துக்கு சம்மதித்ததால், இன்று திருமணம் நடக்கவிருந்தது. வில்லிவாக்கத்திலுள்ள திருமண மண்டபத்தில் நேற்றிரவு மணமக்கள் கார்த்திக் - அம்மு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. உறவினர்கள், நண்பர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

காலையில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், நள்ளிரவில் மணப்பெண் அம்மு மண்டபத்தில் இருந்து காணாமல் போனார். இதனால், திருமண வீட்டில் இருந்த உறவினர்கள், நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆராய்ந்த போது, மணப்பெண் அம்மு ஆட்டோ ஒன்றில் வேறொரு இளைஞருடன் சென்றது தெரியவந்தது. மணப்பெண் மாயமானதால், பெண் வீட்டாரோ மணமகன் வீட்டாரை சமாதானம் செய்ய முடியாமல் திணறினர். மாப்பிள்ளை கார்த்திக் மனமுடைந்து போனார். தொடர்ந்து, வேறு வழியில்லாமல் மாப்பிள்ளை வீட்டார் தங்கள் சீர்வரிசையை எடுத்துக் கொண்டு சோகத்துடன் திரும்பினர்.

இதற்கிடையே, அம்மு, நிஷாந்த் என்ற இளைஞருடன் கிண்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். கார்த்திக், நிஷாந்த் இருவரையும் ஒரே நேரத்தில் காதலித்ததாகவும், கார்த்திக்கை திருமணம் செய்ய தனக்கு பிடிக்காததால் நிஷாந்துடன் சேர்த்து வைக்க போலீஸாரிடத்தில் அம்மு வேண்டுகோள் விடுத்தார். இதனால், போலீஸார் தலையை பிய்த்துக் கொண்டனர். அதே வேளையில் ஏமாற்றப்பட்ட மணமகன் கார்த்திக், இளம்பெண் அம்மு மீது வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்துள்ளார். அதில், 'தன்னை காதலித்து ஏமாற்றி வரவேற்பு நிகழ்ச்சி வரை வந்து விட்டு மோசடி செய்துவிட்டு தப்பியோடிய தன் காதலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன் புகாரில் கூறியுள்ளார்.