திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொள்ளையடித்த நகைகளை சினிமா எடுப்பது, உல்லாசமாக இருப்பது என பல வழிகளில் முருகன் செலவு செய்த நிலையில் தற்போது அந்த நகைகளில் சிலவற்றை தமிழ் நடிகை ஒருவருக்கு பரிசாக வழங்கிய பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை சுவரில் துளைபோட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் கொள்ளையடித்து சென்றது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த கும்பலை சேர்ந்த மணிகண்டன், சுரேஷ் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான முருகள் பெங்களூரு கோர்ட்டில் சரணடைந்தார். இந்நிலையில் முருகனின் மருமகன் சுரேஷ் போலீசாரிடம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் எனது மாமா (முருகன்) என்னை கதாநாயகனாக வைத்து சினிமா படம் எடுக்க திட்டமிட்டார். அதன்படி, 2013-ம் ஆண்டு தெலுங்கில் ஆத்மா என்ற படத்தை எடுக்க தொடங்கினோம். 45 நாட்கள் சூட்டிங் நடந்த நிலையில் பைனான்ஸ் பிரச்சினையால் படம் பாதியில் நின்று விட்டது.

அதன்பிறகு தெலுங்கில் மான்சா என்ற படத்தை எடுத்தோம். அந்த படம் முழுவதுமாக எடுக்கப்பட்டது. கதாநாயகியாக நடித்த பிரபல நடிகைக்கு ரூ.50 லட்சம் சம்பளம் பேசப்பட்டது. அதற்கு முன்பணமாக ரூ.6 லட்சம் கொடுக்கப்பட்டது. மீதி தொகையை கொடுக்க முடியாமல் போனதால், அந்த நடிகை ஐதராபாத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனால், முழுவதுமாக படம் எடுத்து முடிக்கப்பட்டும் ரிலீஸ் ஆகவில்லை. 

இதனைத் தொடர்ந்து திருச்சி டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் சில மாதங்களுக்கு முன்பு சுவரில் துளை போட்டு நகைகள், பணத்தை மாமா முருகன் திட்டபடி கொள்ளையடித்தோம். பின்னர், மீண்டும் படம் எடுப்பதற்காக தமிழில் பல முன்னணி கதாநாயகர்களுடன் நாயகியாக நடித்து பல வெற்றிப்படங்களை தந்த பிரபல நடிகையை ஐதராபாத்தில் நானும், மாமா முருகனும் சந்தித்தோம். 

அவரிடம் கால்ஷீட் கேட்டபோது, தான் தற்போது பல படங்களில் நடித்து வருவதால் பிசியாக இருப்பதாக அவர் தெரிவித்தார். அப்போது நாங்கள் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறோம் என்றோம். அவரும் ஆர்வமாக அப்படியா? என்றார். பின்னர் மாமா, வங்கியில் கொள்ளையடித்த நகை சிலவற்றை அந்த நடிகைக்கு பரிசாக வழங்கினார். அதை அந்த நடிகையும் மகிழ்ச்சியுடன் வாங்கி கொண்டார். கொள்ளையடித்த பணத்தில் தமிழிலும், தெலுங்கிலும் பல நடிகைகளுடன் நானும், மாமாவும் உல்லாசமாக இருந்துள்ளோம் என தனது வாக்கு மூலத்தில் சுரேஷ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

விஜய், சிவகார்த்திகேயன் உள்பட முன்னணி கதாநாயகர்களுடன் தமிழில் இந்த வாரிசு நடிகை நடித்துள்ளார். தற்போது அவரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.