போலீசார் விசாரணையின் போது போலீஸ்  வேனிலேயே  விஷ மாத்திரை தின்று கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோயம்பேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மனைவி கவிதாமணி . இவருக்கும் புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் இருவரும் கடந்த மாதம் 22-தேதி வீட்டை விட்டு வெளியேறி சென்னை வந்துவிட்டனர். கவிதாமணி மாயமானது குறித்து அவரது கணவர் குணசேகரன் மற்றும் உறவினர்கள் நம்பியூர் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிதாமணியை தேடி வந்தனர். அப்போது கள்ளக்காதல் ஜோடி சென்னை நெற்குன்றம் பகுதியில் தங்கி இருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசாரும், கவிதாமணியின் கணவர் குணசேகரன் மற்றும் , உறவினர்கள் சென்னை வந்தனர்.

அவர்கள் நெற்குன்றத்தில் கள்ளக்காதல் ஜோடி தங்கி இருந்த இடத்துக்கு சென்ற போது அங்கு ஜெயக்குமார் மட்டும் இருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

அப்போது கவிதாமணி சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து கோயம்பேடு பஸ் நிலையத்தில் அதிகாலை 4 மணி அளவில் வந்து இறங்கிய கவிதாமணியை அழைத்து வருமாறு ஜெயக்குமாரை அனுப்பி வைத்தனர்.

இதனை கோயம்பேடு பஸ் நிலைய வளைவு அருகே மறைந்து இருந்தபடி போலீசார் கண்காணித்தனர். பஸ்சில் இருந்து இறங்கியதும் கவிதா மணியையும் ஜெயக்குமாரை போலீசார் பிடித்து விசாரணைக்காக நம்பியூர் அழைத்து செல்ல காரில் ஏற்றினர்.

அப்போது கையில் வைத்திருந்த கொடிய விஷ மாத்திரைகளை ஜெயக்குமாரும் கவிதாமணியும் திடீரென தின்று மயங்கினர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் உனடியாக இருவரையும் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கவிதாமணியும், ஜெயக்குமாரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கள்ளக்காதலை பிரித்தால் தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே அவர்கள் முடிவு செய்து இருந்ததாக தெரிகிறது. போலீசில் சிக்கிய உடன் அவர்கள் விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டனர்.

போலீசார் விசாரணையின் போது கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.