சென்னையில் பரபரப்பு... ஐஏஎஸ்., அதிகாரி மனைவி கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை..!
சென்னையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மனைவி கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் மனைவி கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வருபவர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சிவன்அருள்
தற்போது இவர் தமிழக அரசின் பத்திரப் பதிவுத் துறை ஐஜி-யாக பணியாற்றி வருகிறார். இவருக்கு சுமதி (53) என்ற மனைவியும், சச்சின் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் சச்சின் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். மகள் திருமணமாகி கணவருடன் வசித்துவருகிறார்.
இந்நிலையில், இன்று காலை அதிகாரி சிவன்அருள் அலுவலகத்துக்குச் சென்ற பின்னர் மகன் சச்சினும் கல்லூரிக்குச் சென்று விட்டார். இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த சுமதி கழிவறைக்குச் சென்று உள்பக்கம் கதவை தாழிட்டுக் கொண்டார். வெகு நேரமாகியும் அவர் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அவர் வீட்டு வேலை செய்யும் பெண் உடனே அக்கம்பக்கத்தினருக்கும் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
அங்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் கழிவறையில் சுமதி கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். மேலும் அவரது கையில் ரத்தக்கரை படிந்த பிளேடு ஒன்று இருந்தது. பின்னர் போலீசார் சுமதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஐஸ்ஹவுஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் சுமதி பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவரது அறையில் தலையணைக்குக் கீழே எழுதி வைக்கப்பட்டிருந்த கடிதம் ஒன்றையும் ஐஸ் ஹவுஸ் போலீசார் கைப்பற்றினர். அதில், தான் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்து கொள்வதாகவும் தனது மரணத்துக்கு யாரும் காரணம் அல்ல எனவும் எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையிலும் கடந்த ஆறு மாதங்களாக சுமதி மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும் தெரிவித்தனர். கடலூரில் வசித்து வந்த சுமதி தாயார் கரோனா தொற்றால் உயிரிழந்தார். அதன் பிறகு அவரது குடும்பத்தினரிடையே சொத்துப் பிரச்சினை இருந்து வந்ததாகவும், இதனால் மன உளைச்சலில் இருந்த சுமதி தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி சிவன்அருள் மனைவி தற்கொலை செய்து கொண்ட தகவலறிந்து ஐஏஎஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் இரங்கல் தெரிவிக்க அவரது இல்லத்திற்கு வந்து குவிகின்றனர். ஐஏஎஸ் அதிகாரியான சிவன் அருள் முன்பு திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்தார். தற்போது பத்திரப்பதிவு துறை கண்காணிப்பு தலைவராக இருக்கிறார். யோகா, சித்தா போன்றவை பற்றி மிகப்பிரம்மாதமாக சொற்பொழிவாற்றுவார்.