6 குழந்தைகளை பெற்ற பிறகு மனைவி மீது ஏற்பட்ட சந்தேகம்.. ஆத்திரத்தின் உச்சத்தில் கணவர் செய்த பயங்கர காரியம்..!
வேலூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை பெட்ரோல் ஊற்றி கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வேலூர் மாவட்டம் வாலாஜாவை அடுத்த தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து. வயது 60. இவரது மனைவி ஈஸ்வரி. வயது 47. இந்த தம்பதியினருக்கு 4 மகள்கள், 2 மகன்கள் என மொத்தம் 6 குழந்தைகள் இருக்கின்றனர்.
இதனிடையே முத்துவிற்கு அவரது மனைவி ஈஸ்வரியின் நடத்தை மீது கடந்த சில நாட்களாக சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதன்காரணமாக அவருடன் சண்டையில் ஈடுபட்டு வந்திருக்கிறார் முத்து. அடிக்கடி தகராறு ஏற்படவே கணவருடன் சில நாட்களாக ஈஸ்வரி பேசவில்லை என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில் கடந்த 24 ம் தேதி இரவு மீண்டும் கணவன் மனைவியிடையே சண்டை ஏற்பட்டிருக்கிறது. அப்போது மனைவி மீது மேலும் ஆத்திரமடைந்த முத்து, இருசக்கர வாகனத்தில் இருந்த பெட்ரோலை பாட்டிலில் பிடித்து வந்து மனைவி ஈஸ்வரி மீது ஊற்றி தீ வைத்திருக்கிறார். இதில் ஈஸ்வரி பலத்த காயமடைந்து அலறியுள்ளார். முத்துவிற்கும் காயம் ஏற்பட்டிருக்கிறது.
ஈஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் படி காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ஈஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்பாக காவல்துறையிடம் தனது இறப்பிற்கு காரணம் கணவர் முத்து தான் என்று தெரிவித்திருந்தார். அதை மரண வாக்குமூலமாக பதிவு செய்த காவல்துறையினர் முத்து மீதான கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை பெட்ரோல் ஊற்றி கணவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.