சாதி மறுப்பை மீறி மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர் திருமணம் செய்ததால் அவரது தாய் தந்தையரை பெண்ணின் உறவினர் நிர்வாணப்படுத்தி கொலை முயற்சி செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

தருமபுரி மாவட்டம், பிக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் தாளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த பிரியா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். அஜித்குமார் மாற்று சாதியைச் சேர்ந்தவர் என்பதால் பெண்ணின் பெற்றோர் அவர்களது காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதலர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதனால், ஆத்திரமடைந்த பிரியாவின் பெற்றோரும், உறவினர்களும் அஜித்குமாரின் குடும்பத்தினரை நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டிவைத்து விடிய விடிய அடித்ததாக கூறப்படுகிறது. இந்த கொடூரத் தாக்குதலில் நிலைகுலைந்த அஜித்குமாரின் தாயார் கோமா நிலைக்குச் சென்றுள்ளார். பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு சிறப்பு பிரிவை ஏற்படுத்தி தமிழக காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ஒரு வாரம் கூட முழுமையாக முடிவடையாத நிலையில் தருமபுரி மாவட்டத்தில் சாதி ஆணவக்கொலை முயற்சி நடந்துள்ளது பெரும் பரபரப்பையும் கிராம மக்களிடையே பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.