கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்..கண்டித்த கணவன்.. 4 பேருடன் கணவனை போட்டு தள்ளிய மனைவி!
ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அரசூர் குள்ளம்பாளையத்தை சேர்ந்தவர் கங்காதரன். இவருடைய மகன் லோகநாதன் (வயது 27). பி.ஏ. படித்த இவர் யூ டியூபில் வீடியோ பதிவிடும் தொழில் செய்து வந்தார்.
யூடியூபர் கொலை
மேலும் ஓய்வு நேரங்களில் லோகநாதன் தன்னுடைய தந்தை கங்காதரனுடன் சந்தையில் பூட்டு வியாபாரமும் செய்து வந்து உள்ளார். இதேபோல் அதே பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார். இவருடைய மகள் மகேஷ்வரி (26). இவர் சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் மினரல் வாட்டர் கம்ெபனியில் கடந்த 5 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு லோகநாதனும், மகேஷ்வரியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு குழந்தை இல்லை.
லோகநாதன் கடந்த 23-ந் தேதி மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். இந்தநிலையில் சத்தியமங்கலம்- கொடிவேரி சாலையில் கோபியை அடுத்த சின்னட்டிபாளையம் பகுதியில் ரோட்டில் சாலையோர மைல் கல்லில் அடிப்பட்ட நிலையில் மயங்கி கிடந்தார். அவர் அருகில் மோட்டார் சைக்கிளும் கிடந்தது. அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் லோகநாதன் உயிரிழந்தார்.
இதுகுறித்து லோகநாதனின் மனைவி மகேஷ்வரி அளித்த புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் லோகநாதனின் சாவில் சந்தேகம் இருப்பதாக லோகநாதனின் பெற்றோர் பங்களாப்புதூர் போலீசில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் லோகநாதனின் மனைவி மகேஷ்வரியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து லோகநாதனை கொலை செய்து உடலை சாலையில் வீசிச்சென்றதுடன் விபத்து என நாடகமாடியதும் தெரிய வந்தது.
கள்ளக்காதல் காரணம்
இதுகுறித்து போலீஸ் விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. யூ டியூபில் பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வந்த லோகநாதனை மகேஷ்வரி காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னர் லோகநாதன் சரியான வேலை இல்லாமல் இருந்து உள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மகேஷ்வரி வேலை செய்த மினரல் வாட்டர் கம்பெனியில் சத்தியமங்கலம் அருகே உள்ள கோட்டுவீராம்பாளையத்தை சேர்ந்த கருப்புசாமி மகன் கவுரிசங்கர் (26) என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார்.
இவர் பி.டெக் பெட்ரோ கெமிக்கல் என்ஜினீயரிங் படித்து உள்ளார். கணவர் லோகநாதன் சரியான வேலை இல்லாமல் இருப்பதால் குடும்பம் நடத்த சிரமமாக இருப்பதாக கவுரிசங்கரிடம் மகேஸ்வரி கூறி உள்ளார். இதனால் மகேஷ்வரிக்கு அவ்வப்போது பணம் கொடுத்து கவுரிசங்கர் உதவியதாக கூறப்படுகிறது. மேலும் நாள்தோறும் அவரை காரில் அழைத்துச்சென்று வீட்டில் விடுவதையும் வாடிக்கையாக வைத்து உள்ளார். இதை லோகநாதனின் பெற்றோர் கண்டித்து உள்ளனர். ஆனால் மகேஸ்வரி நாள்தோறும் கவுரிசங்கருடன் காரில் வீட்டிற்கு வருவதையே வாடிக்கையாக வைத்திருந்தார்.
இதனால் கடந்த ஒரு ஆண்டாக மகேஷ்வரிக்கும், கவுரிசங்கருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததாகவும் தெரிகிறது. இவர்களுடைய கள்ளக்காதல் லோகநாதனுக்கு தெரிய வந்ததும் அவர் மகேஷ்வரியை கண்டித்து வந்துள்ளார். இதன்காரணமாக 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. கள்ளத்தொடர்பு லோகநாதனுக்கு தெரிந்து விட்டதால் இதுபற்றி கவுரிசங்கரிடம், மகேஷ்வரி கூறி உள்ளார்.
அதற்கு மகேஷ்வரியிடம், கவுரிசங்கர் 'வேலைக்கு வரும்போது எப்படியாவது லோகநாதனை கம்பெனிக்கு அழைத்து வந்துவிடு,' என கூறி உள்ளார்.இதைத்தொடர்ந்து கடந்த 23-ம் தேதி காலை மகேஷ்வரி வேலைக்கு செல்லும் போது, லோகநாதனை அழைத்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் கம்பெனிக்கு வந்துள்ளார். கம்பெனியை சென்றடைந்ததும், லோகநாதனிடம் கவுரிசங்கர் பேசி உள்ளார். அப்போது கம்பெனியின் பின்புறம் பாம்பு ஒன்று பதுங்கி உள்ளது.
அதை அடிக்க வேண்டும் எனக்கூறி கம்பெனியின் பின்புறத்துக்கு லோகநாதனை கவுரிசங்கர் அழைத்து சென்று உள்ளார். அங்கு ஏற்கனவே லோகநாதனை கொலை செய்யும் நோக்கத்தில் சத்தியமங்கலத்தில் உள்ள கிரில் ஒர்க்ஷாப்பில் தொழிலாளியாக வேலை செய்து வந்த கோணமூலை நஞ்சப்பகவுண்டன்புதூரை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரின் மகன் விக்னேஷ்வரன் (24) மறைந்து இருந்து உள்ளார். கம்பெனியின் பின்புறம் லோகநாதன் சென்றதும், யாரும் உள்ளே வராத வகையில் கம்பெனிக்கு வெளியே மகேஷ்வரி நின்றதாக தெரிகிறது.
இதை லோகநாதன் கவனிக்கவில்லை. இதனால் அவர் பாம்பு எங்கே என்று கேட்டபடி சென்று உள்ளார். அப்போது பெரிய கல்லை எடுத்து லோகநாதனின் பின் தலையில் கவுரிசங்கர் தாக்கி உள்ளார். மேலும் லோகநாதனை அங்கு மறைந்திருந்த விக்னேஸ்வரன் கீழே தள்ளி விட்டு கால்களை மடக்கி பிடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து லோகநாதனின் முகத்தை கவுரிசங்கர் அமுக்கி உள்ளார். இதில் மூச்சு திணறி லோகநாதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
4 பேருடன் திட்டமிட்டு கொலை
உடனே கவுரிசங்கர் தனது தம்பி விஜய்க்கு (23) போன் செய்து சரக்குவேனை கொண்டுவரும்படி கூறி உள்ளார். சரக்கு வேன் வந்ததும் இதில் லோகநாதனின் உடல் மற்றும் அவர் வந்த மோட்டார்சைக்கிளை ஏற்றி உள்ளனர். பின்னர் கவுரிசங்கர், மகேஷ்வரி, விஜய் மற்றும் விக்னேஷ்வரன் ஆகியோர் கம்பெனியில் இருந்து சத்தியமங்கலம் வழியாக கொடிவேரி சாலையில் சென்று உள்ளனர். சின்னட்டிபாளையம் என்ற இடத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சரக்கு வேனை நிறுத்தி உள்ளார் கவுரிசங்கர்.
உடனடியாக விக்னேஷ்வரனுடன் சேர்ந்து மோட்டார்சைக்கிளையும், லோகநாதனின் உடலையும் அங்கு இருந்த மைல் கல் அருகே விபத்து நடந்தது போன்று போட்டுவிட்டு நாடகமாடி உள்ளனர். இதைத்தொடர்ந்து லோகநாதனை கொலை செய்ததாக அவருடைய மனைவி மகேஷ்வரி, அவருடைய கள்ளக்காதலன் கவுரிசங்கர், கவுரிசங்கரின் தம்பி விஜய், விக்னேஷ்வரன் ஆகியோரை பங்களாப்புதூர் போலீசார் கைது செய்தனர். லோகநாதனின் உடலை கொண்டு சென்ற சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க : PMK : பாமக தலைவர் ஆகிறார் அன்புமணி.! அப்போ ஜி.கே மணி நிலைமை ? பக்கா பிளான் போட்ட ராமதாஸ் !
இதையும் படிங்க : "ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார்" பிரதமர் மோடி - ஸ்டாலின் விழாவில் புது சர்ச்சை.!