மனநலம் பாதித்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயி..! தண்டனைக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை..!
சேலம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே இருக்கிறது கணவாய்ப்புதூர் ஊராட்சி. இங்கிருக்கும் கே.மோரூர் பகுதியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். வயது 54. அந்த பகுதியில் விவசாயம் பார்த்து வருகிறார். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக மனநலம் பாதிக்கப்பட்ட ரேகா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்கிற பெண்ணை இவர் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.
இதுசம்பந்தமாக பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு மகாலிங்கம் கைதாகி பின்னர் ஜாமீனில் வெளி வந்துள்ளார். இந்த வழக்கு சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணைகள் அனைத்தும் கடந்த 11ம் தேதி முடிவடைந்ததை அடுத்து நவம்பர் 7 ம் தேதி வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் தனக்கு தண்டனை கிடைத்து விடுமோ என்று மகாலிங்கம் பயத்தில் இருந்திருக்கிறார். இதனிடையே நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருக்கும் ஒரு அறையில் உள்பக்கமாக பூட்டி கொண்டு தூக்கிட்டுள்ளார். இரவு வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை தட்டியுள்ளனர். ஆனால் திறக்கப்படாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர் அங்கு மகாலிங்கம் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீவட்டிப்பட்டி காவலர்கள், மகாலிங்கத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.