காவல் நிலையம் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் அபிஷேக் பல்வேறு வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வானூர் அருகே பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
ரவுடி கொலை
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே நொச்சிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் கலைமணி. அவரது மகன் அபிஷேக் (23). இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை காவல் நிலையம் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் அபிஷேக் பல்வேறு வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். இதை அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அபிஷேக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் அதிர்ச்சி
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பரபரப்பு தகவல் கிடைத்தது. நேற்று மாலை அபிஷேக் வீட்டில் இருந்தார். அப்போது 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் அபிஷேக்கிடம் நைசாக பேசி மதுகுடிக்கலாம் என்றனர். இதனை நம்பிய அபிஷேக் அவர்களுடன் சென்றுள்ளார். மதுகடையில் மதுவாங்கிய அவர்கள் அந்த பகுதியில் உள்ள தென்னந்தோப்புக்கு சென்றனர். அங்கு 4 பேரும் சேர்ந்து பயங்கர ஆயுதங்களால் அபிஷேக்கை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
முன்விரோதம்
இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அபிஷேக் அந்த பகுதியில் ரவுடியாக வலம்வந்துள்ளார். இவருக்கும் நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த ரவுடிக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. எனவே அந்த ரவுடி கும்பல் அபிஷேக்கை வெட்டி கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
