புதுச்சேரி அருகே சன்னியாசிகுப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (29). டிரைவரான இவரும் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த சந்தியா (23) என்பவரும் காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர்.

காதல் திருமணம் செய்த 5 மாத கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், வேதனையில் மாமியாரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புதுச்சேரி அருகே சன்னியாசிகுப்பம் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (29). டிரைவரான இவரும் நாகை மாவட்டம் சீர்காழி பகுதியை சேர்ந்த சந்தியா (23) என்பவரும் காதலித்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். செவிலியராக பணிபுரிந்து வந்த சந்தியா 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். திருமணத்துக்கு பிறகு ஆனந்த் தனது மனைவி மற்றும் தாயார் அன்னக்கிளி ஆகியோருடன் சன்னியாசிகுப்பத்தில் வசித்து வந்தார். குடும்ப பிரச்சினை தொடர்பாக சந்தியாவுக்கும், மாமியார் அன்னக்கிளிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அவர்களை அவ்வப்போது ஆனந்த் சமாதானம் செய்து வந்தார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சந்தியா, நேற்று வீட்டில் உள்ள ஒரு அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காலை எழுந்து பார்த்தபோது, மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு கணவர் ஆனந்த் அதிர்ச்சி அடைந்தார். மனைவி பிரிந்து சென்றதை தாங்கிக்கொள்ள முடியாத அவரும், அதே அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்த தாய் அன்னக்கிளி அலறி கூச்சல் போட்டார். உடனே அக்கம் பக்கத்தில் வசிக்கும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மருமகள் இறந்த துக்கம் தாங்காமலும், மகனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தாலும் மனமுடைந்து போன அன்னக்கிளியும் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த உறவினர்கள், அன்னக்கிளி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு மேலும் அதிர்ச்சிக்குள்ளாகினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருபுவனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினையில் மருமகள், மாமியார் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சன்னியாசிகுப்பத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமணமாகி 8 மாதமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.