குடும்பத் தகராறு…. கணவன், மனைவி, குழந்தை உட்பட 3 பேர் தற்கொலை… கடலூரில் அதிர்ச்சி சம்பவம்…
திட்டக்குடி அருகே கணவன்-மனைவி மற்றும் குழந்தை உட்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த எடைச்செருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் (31). இவரது மனைவி உஷா (25). இவர்களுக்கு 3 வயதில் பிரிதிஷா என்ற மகள் இருந்து வந்தார். பிரகாஷ், மனைவி குழந்தையுடன் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் கொத்தனார் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் பிரகாஷ், மனைவி குழந்தையுடன் சொந்த கிராமத்துக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வந்துள்ளார். இந்த நிலையில், பிரகாஷ் வீட்டின் கதவு வெகு நேரமாகவே திறக்காமலே இருந்துள்ளது. கதவு நீண்ட நேரம் திறக்கப்படாததால், பிரகாஷின் உறவினர்கள் வந்து கதவை தட்டிப்பார்த்துள்ளனர். கதவு உட்பக்கமாக பூட்டி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் ஜன்னல் கதவை திறந்து பார்த்தபோது உஷா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்துள்ளார்.
உடனடியாக, கதவை உடைத்துக் கொண்டு வீட்டினுள் சென்று பார்த்தபோது படுக்கையில் பிரகாஷ், அவரது மகள் பிரதிஷா இருவரும் கையில் வெட்டுக்காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். பிரகாஷின் இடது கையிலும் உஷாவின் வலது கையிலும், குழந்தை பிரதிஷாவின் வலது கையிலும் வெட்டுக்காயம் இருந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பிரகாஷ், உஷா, பிரதிஷா ஆகியோரின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மூன்று பேரும் தற்கொலை செய்து கொள்வதற்காக காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை, தாய், மகள் ஆகிய மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.