தாயை கழுத்தை நெரித்துக் கொடூரமாக கொன்ற பொறியியல் பட்டதாரி..! மது அருந்த பணம் கொடுக்காததால் நடந்த வெறிச்செயல்..!
திருச்சி அருகே மது அருந்த பணம் கொடுக்காத தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த மகனால் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
திருச்சியில் இருக்கும் ராம்ஜிநகர் மில் காலனி பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவருடைய மகன் குமரவேலு. பொறியியல் பட்டதாரியான இவர் திருச்சியில் இருக்கும் ஒரு தனியார் டைல்ஸ் கடையில் பணிபுரிந்து வந்திருக்கிறார். திருமணமான குமரவேல் தனது மனைவியுடன் வீட்டின் மேல் தளத்தில் வசித்து வருகிறார். அவரது தாயார் கீழ் தளத்தில் வசித்ததாக தெரிகிறது.
குமரவேல் அதிகமான குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வந்து குடும்பத்தினரோடு தகராறில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். சம்பள பணத்தில் குடிப்பது மட்டுமில்லாமல் மனைவியின் நகைகளையும் அடகு வைத்து குடித்து தீர்த்திருக்கிறார். அத்துடன் விடாமல் குடும்பத்தினரிடமும் குடிப்பதற்கு பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு குடிப்பதற்காக தாய் சாந்தியிடம் குமாரவேல் பணம் கேட்டிருக்கிறார். அவருக்கு பணம் கொடுக்க சாந்தி மறுத்ததாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. நீண்ட நேரம் நடந்த வாக்கு வாதத்திற்கு பிறகு சாந்தி தூங்கச் சென்று இருக்கிறார். ஆனால் ஆத்திரத்தில் இருந்த குமாரவேல் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த அவரது தாயை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சித்திருக்கிறார். பின்னர் தலையணையால் முகத்தை அழுத்தி கொடூரமாக கொலை செய்துவிட்டு குமரவேல் தப்பி விட்டார்.
இதனிடையே அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் சாந்தி கொலை செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அளித்த தகவலின்படி கொலை நடந்த வீட்டிற்கு காவல்துறையினர் வந்தனர். சாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தப்பியோடிய சாந்தியின் மகன் குமரவேலை தீவிரமாக தேடி வருகின்றனர்.