திருச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். ஒருதலை காதலால், வாலிபர் ஒருவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.

திருச்சி தென்னூர் அண்ணாநகர் புதுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன். இவர் புதிய தமிழகம் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட செயலாளர். தற்போது கட்சியில் தேர்தல் பணிக்கு மாநில பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அய்யப்பனின் மகள் மலர்விழி மீரா / இவர் திருச்சியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர் நேற்று மாலை கல்லூரி முடிந்து பஸ்சில் வீடு திரும்பி கொண்டு இருந்தார். ராமகிருஷ்ணா மேம்பாலம் அருகே பஸ்சில் இருந்து இறங்கி வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்குள்ள தண்ணீர்தொட்டி அருகே வந்த ஒரு வாலிபர் மலர்விழி மீராவிடம் மறித்து தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் மலர்விழி மீராவை சரமாரியாக குத்தினார்.

இதில் அவர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து கீழே சாய்ந்தார். இதனை கண்டு அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்து ஓடி சென்று மாணவியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதற்கிடையே கத்தியால் குத்திய அந்த வாலிபரை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அந்த வாலிபரும் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்த தில்லை நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அரசு மருத்துவமனையிலும் அந்த வாலிபரை விடாமல் பொதுமக்கள் துரத்தி சென்று தாக்கினர். இதில் அவர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

விசாரணையில் கத்தியால் குத்திய வாலிபர், அதே பகுதியை சேர்ந்த முரளி என்பதும், கொலையான மலர்விழி மீராவுக்கு உறவினர் என்பது தெரியவந்தது.

முரளிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர் என்பதும், சென்னையில் வேலை பார்த்து வரும் அவர், மலர்விழி மீராவை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அவரது காதலை ஏற்காததால் ஆத்திரம் அடைந்து அவரை கத்தியால் குத்தி வெறிச்செயலில் ஈடுபட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

திருச்சியில் ஒருதலை காதலால் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.