சொகுசு கார்.. ஆடம்பர வாழ்க்கை.. ரூ.55 லட்சம் ஜிஎஸ்டி தொகையை சுருட்டிய மின்துறை கேஷியருக்கு ஆப்பு..!
GST பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றி செலவு செய்ததாகவும், கார், விலையு உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கினேன் என்று பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுச்சேரி மின்துறை தலைமை அலுவலகத்தில் ஜி.எஸ்.டி., பணம், 55.75 லட்சம் ரூபாயை கையாடல் செய்த காசாளரை போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அவரிடம் நடத்திய விசாரணையில் GST பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றி செலவு செய்ததாகவும், கார், விலையு உயர்ந்த மோட்டார் சைக்கிளை வாங்கினேன் என்று பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார்.
புதுச்சேரி சோனாம்பாளையத்தில் மின்துறை தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு மின்துறை கண்காணிப்பு பொறியாளர்கள் அலுவலகம், நிதி கட்டுப்பாட்டாளர், மின்கட்டணம் வசூல், பராமரிப்பு அலுவலக பணிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகின்றன. மின்துறை நிதி கட்டுபாட்டாளராக மோகன்குமார் பணியாற்றி வருகிறார்.
மின்துறையின் GSTக்கு தனி கணக்கு தொடங்கபட்டு, அதில் பணம் செலுத்தபட்டு வருகிறது. இந்த கணக்குகளை ஆய்வு செய்த போது, கடந்த 2020ம் ஆண்டு முதல் தற்போது வரை ரூ. 55 லட்சத்து 75 ஆயிரம் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. இது குறித்து காசாளர் யோகேஷ் என்பவரிடம் கேட்ட போது அவர் சரியான பதிலை கூறவில்லை.
இது குறித்து ஒதியஞ்சாலை காவல்நிலையத்தில், மோகன்குமார் புகார் தெரிவித்தார். இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, யோகேஷை கைது செய்தனர். பின்பு அவரிடம் விசாரணை நடத்திய போது GST பணத்தை தனது வங்கி கணக்கிற்கு மாற்றி கையாடல் செய்ததாகவும், அந்த பணத்தை சொந்த தேவைக்கு பயன்படுத்தினேன். மேலும் கார் மற்றும் விலையுயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கினேன் என்று வாக்குமூலம் கொடுத்தார். இதனையடுத்து காசாளர் யோகேஷை போலீசார் கைது செய்து கார் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.