தூத்துக்குடியில் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடியில் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தூத்துக்குடி மாவட்டம் குலையன்கரிசல் கிராமத்தைச் சேர்ந்தவர் கருணாகரன் (64). இவர் திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தார். மேலும், வட்டி தொழில், தூத்துக்குடி தெர்மல் அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தப்பணி ஒப்பந்தக்காரர் உள்ளிட்ட பல தொழில்களிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தூத்துக்குடி யூனியன் தலைவராகவும் இருந்தார். 

இந்நிலையில், கருணாகரன் நேற்று மாலை குலையன்கரிசலில் இருந்து திரவியபுரம் செல்லும் ரோட்டில் உள்ள தனது தோட்டத்துக்கு தனியாக காரில் சென்றார். அவர் தோட்டத்தை பார்வையிட்டு மீண்டும் காரில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் காரை வழிமறித்தனர். பின்னர், காரில் இருந்து இறங்கிய கருணாகரனை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த கருணாகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து அந்த கும்பல் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றது.

இந்த கொலை தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கருணாகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குலையன்கரிசல் பகுதியில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக தி.மு.க. பிரமுகர் கருணாகரனுக்கும், அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அந்த தகராறு காரணமாக கருணாகரன் கொலை செய்யப்பட்டாரா?,அரசியல் காரணங்களுக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் பில்லா ஜெகன், கொலை வழக்கில் கைது செய்ப்பட்டுள்ள நிலையில், தற்போது அனிதாவின் மற்றொரு ஆதரவாளரான கருணாகரன் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.