ஓயாமல் டார்ச்சர்.. மாமியாரை எரித்து கொன்று நாடகமாடிய மருமகள்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!
மாமியார் மருமகளுக்கு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரேஷ்மா இஞ்சி இடிக்கும் சிறிய உரல் கல்லால் மாமியார் நவீன் தலையில் தாக்கினார். இதில், மயங்கி விழுந்த மாமியாரை கூரான ஆயுதத்தால் தாக்கினார். இதனால் செய்வதறியாது திகைத்த ரேஷ்மா காஸ் அடுப்பின் டியூப்பை உருவி காஸை கசிய வைத்து தீ வைத்தார்.
4 ஆண்டுகளாக கொடுமை செய்த மாமியாரை கொலை செய்துவிட்டு காஸ் கசிவால் இறந்ததாக நாடகமாடிய மருமகள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி காந்தி மார்கெட் பழைய பால்பண்ணை அடுத்த விஸ்வாஸ் நகரை சேர்ந்த இப்ராகிம் மனைவி நவீன்(46). இவரது மகன் அசின்கான்(28) விருத்தாசலத்தில் ரைஸ் மில் நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் இப்ராகிம் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்டார். இதனால், மருமகள் ரேஷ்மாவுடன் நவீன் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் காலை உறவினர் வீட்டு விசேஷத்திற்கு அசின்கான் சென்றார். பின்னர், பிற்பகலில் வீட்டுக்கு வந்த போது சமையலறையில் தாய் நவீன் தீக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தார்.
இதுகுறித்து மனைவி ரேஷ்மாவிடம் கேட்டபோது காஸ் அடுப்பை பற்ற வைத்த போது அவர் மீது திடீரென தீப்பிடித்தது. காஸ் டியூப்பில் தீப்பிடித்ததில் தீ வேகமாக பரவி உடல் கருகி நவீன் பலியானதாக கூறினார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து ரேஷ்மா மீது ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அதில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீசார் கூறுகையில்;- சென்னையை சேர்ந்த ரேஷ்மா அசின்கானை காதலித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அதன்பின் தாய், தந்தையுடன் தொடர்பு இல்லாமல் ரேஷ்மா இருந்து வந்தார். ரேஷ்மா தம்பதிக்கு இரண்டரை வயதில் மகன் உள்ளார். திருமணத்துக்கு பின்னர் ரேஷ்மாவிடம் மாமியார் நவீன் தகராறில் ஈடுபட்டு வந்தார். சில மாதங்களுக்கு முன் ரேஷ்மா மீண்டும் கர்ப்பம் தரித்தார். இதை ஏற்றுக்கொள்ளாத மாமியார் கருவை கலைக்க கூறி டாக்டரிடம் ரேஷ்மாவை அழைத்து சென்றார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் மீண்டும் மாமியார் மருமகளுக்கு தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரேஷ்மா இஞ்சி இடிக்கும் சிறிய உரல் கல்லால் மாமியார் நவீன் தலையில் தாக்கினார். இதில், மயங்கி விழுந்த மாமியாரை கூரான ஆயுதத்தால் தாக்கினார். இதனால் செய்வதறியாது திகைத்த ரேஷ்மா காஸ் அடுப்பின் டியூப்பை உருவி காஸை கசிய வைத்து தீ வைத்தார். இதனால், தீ விபத்தில் உயிரிழந்தது போல் நாடகமாடியுள்ளார். ஆனாலும், தலையில் ஏற்பட்ட காயத்தால் ரேஷ்மா சிக்கினார். மாமியாரை மருமகள் கொலை செய்துவிட்டு நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.