’பசங்களோட பழகக்கூடாது..’ கண்டித்த தாயை ஆண் நண்பர்களுடன் சேர்ந்து.. தீர்த்துக்கட்டிய மகள் !
பாலிடெக்னிக் கல்லூரியில் படிக்கும் ஆண் நண்பர்களுடன் பேசாதே என்று கண்டித்த தாயை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்து இருக்கிறார் மகள். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆண் நண்பர்களுடன் பழக்கம் :
தூத்துக்குடி வண்ணார் 2வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி முனியலட்சுமி. இந்தத் தம்பதியர் இருவர் இடையே கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து வாழ்கின்றனர். இவர்களது 17 வயதுடைய மகள் அருகில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அந்தப் பெண் சில ஆண் நண்பர்களுடன் தொடர்ந்து நேரிலும் போனிலும் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்த விபரம் தெரியவர அவரது தாய் மகளை அழைத்து ஆண்களிடம் பழகுவதை கண்டித்து பேசி உள்ளார். இதனைத் தொடர்ந்து தாயை கொலை செய்ய விபரீத முடிவு செய்தார். அந்தப் பெண் நேற்று இரவு நண்பர்கள் 3 பேரை வரவழைத்து தாயை கொலை செய்துள்ளார். பின்னர் அவர்களது நண்பர்களை வீட்டைவிட்டு அனுப்பிவிட்டு தாயுடன் அன்று இரவு தங்கி உள்ளார். சுமார் 2 மணி நேரத்திற்கு பின் காவல் துறைக்குப் போன் செய்து தனது தாயை யாரோ கொலை செய்து விட்டனர் என தெரிவித்து உள்ளார்.
தாயை கொன்ற மகள் :
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தென்பாகம் காவல் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன், சப்-இன்ஸ்பெக்டர் முத்து கணேஷ், சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முனியலட்சுமி உடலை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டபோது அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியது.
தாய் முனியலட்சுமியை அவரது மகளே தனது ஆண் நண்பர்களுடன் இணைந்து கொலை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக 17 வயது மாணவி, மற்றும் அவரது நண்பர்கள் முள்ளக்காடு ராஜீவ் நகர் 1வது தெருவைச் சேர்ந்த ரவி மகன் கண்ணன் (20), முத்தையாபுரம் ஐயன் கோவில் தெருவை சேர்ந்த சிவபெருமாள் மகன் தங்க குமார் (22) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற தாயை மகளே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.