வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக தந்தை,மகள்... சாலையோரத்தில் பரிதாபமாக கிடந்த சோகம்!!
தந்தையும், மகளும் விஷம் குடித்து வாயில் நுரை தள்ளிய நிலையில் சாலையோரம் பிணமாக கிடந்தது திருமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் தோப்பூர் மேம்பாலம் அருகே வசித்து வருபவர் கிருபாகரன். இவருக்கும் இவரது மனைவிக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பே விவாகரத்து ஆகியுள்ளது. இந்த தம்பதியினருக்கு 1 மகள் உள்ளனர். விவாகரத்தான சமயத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி பெண் குழந்தை தந்தையிடம் கொடுக்கவேண்டும் என உத்தரவு வந்ததால் கிருபாகரனிடம் வளர்ந்து வந்துள்ளது.
இந்நிலையில், மதுரை திருமங்கலம் அருகே உள்ள மேம்பாலத்தின் சாலையோரத்தில் இன்று காலை இவரும், இவருடைய மகளும் வாயில் நுரை தள்ளியவாறு உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். கிருபாகரன் தனது மகளுக்கு விஷம் கொடுத்து தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதைப் பார்த்த அங்கிருந்த தனியார் நிறுவனத்தின் வாட்ச்மேன் இவர்களை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அப்பகுதி காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். விரைந்து வந்த காவல்துறையினர். இருவரின் உடலையும் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் தரையில் இருந்த மருந்து பாட்டிலை பரிசோதித்தபோது அதில் களைக் கொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும், அவர்களுடைய பை மற்றும் சூட்கேஸை ஆராய்ந்து பார்த்த போது அதில், எந்த வித தகவலும் இல்லை. கிருபாகரனின் சட்டையில் டிரைவிங் லைசன்ஸ் மற்றும் மகளின் போட்டோ வைத்து போலீசார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்.
கிருபாகரன் தன் தாய் வீட்டில் வசித்து வந்ததும், கடந்த 29-ஆம் தேதி இருவரும் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. மகள் மற்றும் தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.