Asianet News TamilAsianet News Tamil

தலித் பெண் ஆணவ கொலையில் பரபரப்பு திருப்பம்... 3 வாலிபர்கள் அதிரடி கைது!!

மேட்டுப்பாளையம் தலித்  பெண் ஆணவ கொலையில் மேலும் 3 வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

Dalit Woman Murder Murder Turns Out
Author
Chennai, First Published Jun 30, 2019, 3:41 PM IST

மேட்டுப்பாளையம் தலித்  பெண் ஆணவ கொலையில் மேலும் 3 வாலிபர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஸ்ரீரங்கராயன் ஓடை பகுதியை சேர்ந்த கருப்பசாமிக்கு வினோத் , கனகராஜ் , கார்த்திக் என்ற மூன்று மகன்கள் இருந்தனர். இவர்கள் மூவரும் சுமை தூக்கும் தொழிலாளிகள். இதில் கனகராஜ், வெள்ளிப் பாளையம் ரோட்டில் உள்ள ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இவர்களுடைய காதல் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இந்த காதலுக்கு கனகராஜின் தந்தை கருப்பசாமி மற்றும் சகோதரர்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்தநிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பு கனகராஜ் தனது காதலியை கல்யாணம் செய்துகொண்டு, அதே பகுதியில் ஒரு வாடகை வீட்டுக்கு சென்று விட்டார். இந்த விஷயம் தெரிந்த கனகராஜின் அண்ணன் வினோத் நேற்று முன்தினம் மாலை 5.20 மணியளவில் வினோத், கனகராஜின் வீட்டுக்கு சென்றார். அப்போது அண்ணன்-தம்பிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.இதில் ஆத்திரம் அடைந்த வினோத் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கனகராஜை சரமாரியாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் அவர் அலறித்துடித்தார். அவரது சத்தம் கேட்டு காதலி ஓடி வந்து தடுக்க முயன்றார். இதனால் அந்த இளம் பெண்ணின் தலை மற்றும் முகத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். அதன்பிறகும் ஆத்திரம் அடங்காத வினோத், கனகராஜை அரிவாளால் வெட்டினார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உடனே வினோத் அந்த வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து கனகராஜின் காதலியை மீட்டு சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சைப் பலனின்றி பலியானார்.

இந்த ஆணவ படுகொலை கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இக்கொலை தொடர்பாக கனகராஜ் அண்ணன் வினோத்தை ஏற்கனவே போலீசார் கைது செய்தனர்.  ஆனால் இக்கொலையில் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த அய்யப்பன், கந்தவேல், சின்ராஜ் ஆகியோர் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். அவர்களையும் கைது செய்ய வேண்டும் என வர்ஷினி பிரியா உறவினர்கள் குற்றம் சாட்டினார்கள். மேலும் அந்த 3 பேரையும் கைது செய்தால் தான் வர்ஷினி பிரியா உடலை வாங்குவோம் என கூறி கோவை அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினார்கள்.

அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித் குமார் 3 பேரையும் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து வர்ஷினி பிரியா உடலை அவரது உறவினர்கள் வாங்கி சென்றனர்.

இந்த நிலையில், வர்ஷினி பிரியா கொலைக்கு உடந்தையாக இருந்த அய்யப்பன், கந்தவேல், சின்ராஜ் ஆகியோரை மேட்டுப்பாளையம் போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையே வர்ஷினி பிரியாவின் உடல் மேட்டுப்பாளையம் காந்திபுரத்தில் உள்ள அவரது பாட்டி ரங்கம்மாள் வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு எல்.ஐ.சி.க்கு பின்புறம் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொது செயலாளர் வன்னியரசு, உடுமலை கவுசல்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், வர்ஷினி பிரியா இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கனகராஜ் வீடு அருகே நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த பகுதியில் பதட்டம் நீடிப்பதால் மேட்டுப் பாளையத்தில் தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios