“நீயும், நானும் கருப்பு... குழந்தை மட்டும் எப்படி சிவப்பு?”... மனைவி மீதான சந்தேகத்தால் கணவன் செய்த கொடூரம்!
மறுநாள் காலை கண்விழித்து பார்த்த போது, தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை இறந்து கிடந்தது கண்டு சிவரஞ்சனி அதிர்ச்சி அடைந்தார்.
கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்த சாக்காங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜிவ், சிவரஞ்சனி தம்பதிக்கு கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்குள் 10 ஆண்டு அளவிற்கு வயது வித்தியாசம் இருந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனிடையே கர்ப்பமடைந்த சிவரஞ்சனிக்கு 8 நாட்களுக்கு முன்பாக ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
ராஜிவ் அடிக்கடி குடித்துவிட்டு வந்து சிவரஞ்சனியுடன் தகறாரில் ஈடுபட்டு வந்துள்ளார். குழந்தை பிறந்த பிறகாவது தீர்வு கிடைக்கும் என நினைத்து வந்த சிவரஞ்சனிக்கு அடுத்த பிரச்சனை குழந்தை மூலமாகவே வெடித்தது. சிவரஞ்சனி, ராஜிவ் இருவருமே கருப்பு, ஆனால் குழந்தை மட்டும் கலராக இருப்பதாக கூறி ராஜிவ் தகராறு செய்து வந்துள்ளார். இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு சண்டை நடந்த நிலையில் இருவரும் தூங்க சென்றுள்ளனர்.
மறுநாள் காலை கண்விழித்து பார்த்த போது, தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை இறந்து கிடந்தது கண்டு சிவரஞ்சனி அதிர்ச்சி அடைந்தார். குழந்தை திடீரென இறந்ததால் சந்தேகம் அடைந்த சிவரஞ்சனி போலீசில் புகார் அளித்தார். போலீசார் ராஜிவ்வை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்த போது, "இரவில் இருவரும் தூங்க சென்ற பின் நள்ளிரவில் எழுந்து குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு படுத்து தூங்குவது போல் நடித்தேன்" என வாக்குமூலம் அளித்துள்ளார். மனைவி மீதான சந்தேகத்தால் தகப்பனே பிறந்து 8 நாட்களான பச்சிளம் குழந்தையின் கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.