பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர தந்தை .. ஆயுள்தண்டனை அளித்து நீதிமன்றம் அதிரடி ..
நெல்லையில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு நீதிமன்றம் ஆயுள்தண்டனை வழங்கி தீர்ப்பளித்து இருக்கிறது .
நெல்லையைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவரின் வயது 45 . இவருடைய மனைவி சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து சென்று விட்டார் . இவர்களுக்கு இரண்டு மகள்கள் , ஒரு மகன் . மூவரும் தந்தையோடு வசித்து வந்தனர் .
இந்தநிலையில் கடந்த 2017 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந் தேதி வீட்டில் இருந்த ஒரு மகளை , மெக்கானிக் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் . இதுகுறித்த தகவல் மாவட்ட குழந்தைகள் நல காப்பகத்திற்கு சென்றுள்ளது . அவர்களுடைய புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்து மெக்கானிக்கை சிறையில் அடைத்தது.
இது சம்பந்தப்பட்ட வழக்கு விசாரணை நெல்லை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி இந்திராணி வழக்கை விசாரித்து சம்பந்தப்பட்ட மெக்கானிக்கிற்கு ஆயுள் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு அளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார்.