கோவை அருகே 10ம் வகுப்பு மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குடும்ப நண்பரான முத்துக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கோவை அருகே 10ம் வகுப்பு மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குடும்ப நண்பரான முத்துக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 3 சவரன் நகைக்காக மாணவியை வீட்டுக்கு வரவழைத்து அவர் கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. 

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த பெண், கணவரைப் பிரிந்த நிலையில், 17 மற்றும் 14 வயது மகள்கள் தாயாருடன் வசித்து வருகின்றனர். இளைய மகள் அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 11-ம் தேதி திடீரென மகள் காணவில்லை. பல்வேறு இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், பதறிப்போன தாய் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், சிவானந்தபுரம் சங்கரப்பன் தோட்டம் மாருதி நகரில் உள்ள முள்புதரில் ஒரு சாக்கு மூட்டை கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அதை பிரித்து பார்த்த போது கை, கால்கள், வாய் கட்டிய நிலையில் சிறுமி சடலமாக இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து, சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கொலை செய்யப்பட்ட மாணவி காணாமல் போன பள்ளி மாணவி என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் காணாமல் போன வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து மாணவியை கொலை செய்தது யார், எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்தும் மாணவி பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை அருகே 14 வயது மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குடும்ப நண்பரான முத்துக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் 3 சவரன் நகைக்காக மாணவியை வீட்டுக்கு வரவழைத்து அவர் கொலை செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தாரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 3 சவரன் நகைக்காக அவரது உறவினரே பள்ளி மாணவி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.