தலையணை கொண்டு அமுக்கி கொலை...சடலத்தை பிரோவில் மறைத்து வைத்து நாடகம்..4 வயது சிறுவன் கொலை பின்னணி..
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அருகே நகைக்காக 4 வயது சிறுவனை கொலை செய்து பீரோவில் அடைத்த வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஜான் ரிச்சார்ட். இவர் தற்போது வெளி நாட்டில் தங்கி தனியார் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவரது மனைவி சகாய சில்ஜா தனது மகன் ஜோகன் ரிஷி மற்றும் மகள் ஆகியோருடன் கடியப்பட்டணம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றார்.
இந்நிலையில் சிறுவன் ஜோகன் ரிஷி 21 ஆம் தேதி மதியம் வீட்டிற்கு வெளியே விளையாட சென்ற பின் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. உடனடியாக அக்கம் பக்கத்தில் தேடி சிறுவன் கிடைக்காத நிலையில் தாயார் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சிறுவன் காணாமல் போன நேரத்தில் கழுத்து மற்றும் கையில் தங்க நகைகள் அணிந்திருந்ததால் நகைக்காக கடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கினர்.
இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த பாத்திமா என்ற பெண்ணை விசாரித்தலில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதாக சொல்லபடுகிறது. இதனால், அவர் மீது சந்தேகமடைந்த காவல்துறையினர் அவரை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்து சென்றனர். ஆனால் அப்போது அவரோ நான் சிறுவனை பார்க்கவில்லை என்று நடித்துள்ளார்.
இதற்கிடையே இந்த தகவல் காட்டு தீயாக ஊருக்குள் பரவ சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பாத்திமா வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடிய போது, அங்கிருந்த பீரோவை உடைத்தது. அப்போது அந்த பிரோவில் காணாமல் போன சிறுவன் துணியால் சுற்றப்பட்ட நிலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதிலும், அந்த சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்தது விட்டதாக தெரிவித்தனர்.
இதனைக்கேட்டு, கடும் ஆத்திரமடைந்த உறவினர்கள் பாத்திமாவின் வீட்டையும் வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் சல்லி சல்லியாக அடித்து நொறுக்கி வீதியில் வீசினர். மேலும் கொலைக்காரி பாத்திமா மற்றும் அவரது கணவர் இருவரை உடனடியாக கைது செய்ய கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். நகைக்காக சிறுவனை கொலை செய்த சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக பாத்திமாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,வீட்டிற்கு வெளியே விளையாடிய சிறுவனின் கழுத்தில் கிடந்த ஒன்றரை சவரன் நகைக்கு ஆசைப்பட்டு,சிறுவனிடம் நைசாக பேச்சுக்கொடுத்து வீட்டிற்கு அழைத்து வந்து தலையணையால் அமுக்கி சிறுவனை கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் கழுத்தியில் கிடந்த தங்க செயினையும் இடுப்பில் கிடந்த வெள்ளிக்கொடியையும் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டுள்ளார் பாத்திமா. பின்னர், இறந்த சிறுவனின் சடலத்தை துணியால் சுற்றி பிரோவுக்குள் வைத்து விட்டு சிறுவனை தேடுவதாக நடித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இரவில் யாரும் இல்லா நேரத்திள் சடலத்தை மறைத்து எடுத்து சென்று கடலில் வீசி விடலாம் என்று தனது கணவர் சரோபியுடன் திட்டம் போட்டிருந்ததாக பகீர் தகவலை போலீசாரிடம் கூறியுள்ளார்.இதனையடுத்து பாத்திமா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, தப்பி ஓடிய அவரது கணவரையும் போலீசார் கைது செய்தனர்.