வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி கோழி பாண்டியன் கொடூர கொலை... சிதம்பரத்தில் பதற்றம்..!
சிதம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சிதம்பரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடியை மர்ம நபர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை நகரை சேர்ந்தவர் பிரபல ரவுடி கோழி பாண்டியன். இவர் மீது காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.
இந்நிலையில், நேற்றிரவு மர்ம கும்பல் ஒன்று, அண்ணாமலை மருத்துவக்கல்லூரி அருகே உள்ள ஹோட்டலில் கோழி பாண்டியன் உணவருந்தி கொண்டிருந்தார். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்ட முயற்சித்துள்ளனர். அப்போது கோழி பாண்டியன் தப்ப முயன்றதால் மர்ம நபர்கள் அவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி விட்டு தப்பிச்சென்றனர். இதில், பாண்டியன் உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பாண்டியன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்று இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 4 தனிப்படை அமைத்து அந்த மர்ம கும்பலை தேடிவருகின்றனர். இந்த படுகொலை காரணமாக சிதம்பரத்தில் பதற்றம் நிலவி வருகிறது.